
கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாகப் பணியாற்றி வந்த அண்ணாமலை, அந்தப் பதவியிலிருந்து விருப்ப ஓய்வுபெற்றார். கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தற்சார்பு, விவசாயம் போன்ற பணிகளி ஈடுபட்டு வந்தார். பின்னர் ஓராண்டுக்கு முன்னர் அண்ணாமலை பாஜகவில் இணைந்தார். அவருக்கு பாஜகவில் மாநிலத் துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அரவக்குறிச்சியில் அண்ணாமலை போட்டியிட்டார். ஆனால், தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
இந்நிலையில் மத்திய அமைச்சரவையில் நடந்த விரிவாக்கத்தில், தமிழக பாஜக தலைவர் எல்.முருகனுக்கு இணையமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. பாஜகவில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற கொள்கை உள்ளதால், எல்.முருகனுக்குப் பதில் அண்ணாமலை புதிய தலைவராக நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகின. அதுபோலவே பாஜக தலைவராக அண்ணாமலையை நியமித்து பாஜக தலைமை அறிவிப்பு வெளியிட்டது.
தலைவராக நியமிக்கப்பட்ட நிலையில், அதுதொடர்பாக அண்ணாமலை ட்விட்டரில் தன் மகிழ்ச்சியை வெளிபடுத்தியுள்ளார். அதில், “நமது தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா எனக்கு வழங்கி இருக்கும் தமிழக பாஜகவின் தலைவர் எனும் பொறுப்பு என்னை பணிவும், பெருமையும் கொள்ளச் செய்கிறது. நம் கட்சி பல ஆண்டுகளாக பல காரியகர்த்தாக்களின் உயிர்த் தியாகங்களாலும் மற்றும் பல தன்னலமற்ற தலைவர்களின் தியாகங்களாலும் வழிநடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள நம்முடைய கட்சியின் மூத்த தலைவர்களின் வழிகாட்டுதலுடன், ஒரு அணியாக, நாம் அனைவரும் ஒன்றிணைந்து, தேசியத் தலைமை என் மீது வைத்துள்ள நம்பிக்கையைப் போற்றும் விதமாக உறுதியுடன் நடப்போம்.
அழகான மாநிலமான நம் தமிழகம், பிரதமர் நரேந்திர மோடியின் தமிழ்ப் பற்றும், நமது தமிழ்ப் பண்பாடு மீது அவர் கொண்டுள்ள பெருமையும் அனைவருக்கும் தெரியும். நம்முடைய கட்சியின் சித்தாந்தத்தையும், உயிரான தேசப் பற்றையும் மற்றும் தமிழ் மக்கள் மீது பிரதமர் கொண்டுள்ள பேரன்பையும், தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டுக்கும் எடுத்துச் செல்லும் வரை நாங்கள் ஓயமாட்டோம்” எனத் தெரிவித்துள்ளார்.