நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்களிக்க வேண்டும் என்பது தொடர்பாக திருச்சியில் கண்டன பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வாங்கினோம். ஆனால், காவல் துறை திடீரென அனுமதியை ரத்து செய்துள்ளது என்று முன்னாள் அமைச்சர் கே.என். நேரு கூறியுள்ளார்.
நீட் தேர்வுக்கு எதிராக தமிழக மாணவர்கள் போராடி வந்த நிலையில் தமிழகத்திற்கு விலக்கு கிடைக்கும் என மத்திய அமைச்சர்களும் தமிழக அமைச்சர்களும் உறுதி அளித்தனர்.
ஆனால் உச்சநீதிமன்றம் தலையிட்டு நீட்டிலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கிடையாது என உத்தரவிட்டது. நீதிமன்ற தீர்ப்பு எதிராக செயல்பட முடியாது என கூறி கையை விரித்தது தமிழக அரசு.
மருத்துவ படிப்பில் சேர முடியாத காரணத்தால் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டும், நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமிழகம் முழுவதும் பல்வேறு எதிர்ப்புகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் திமுக தலைமையில் எதிர்கட்சிகளின் பொதுக்கூட்டம் திருச்சியில் இன்று நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள பல தலைவர்கள் திருச்சிக்கு வருகை தந்துள்ளனர்.
இந்த நிலையில், திமுகவின் பொதுக்கூட்டத்துக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. அதுமட்டுமன்றி, திருச்சி காவல்துறையும், உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததால் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து கே.என். நேரு, செய்தியாளர்களிடம் பேசும்போது, பொதுக்கூட்டத்துக்கு காவல்துறை அனுமதி அளித்த நிலையில் இப்போது மறுக்கின்றனர். உச்சநீதிமன்றம் நீட்டுக்கு எதிராக பொதுக்கூட்டத்துக்கு தடை விதித்துள்ளதை அடுத்து, அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக காவல் துறை கூறியுள்ளது.
இந்த பொதுக்கூட்டம் இன்னும் சிறிது நேரத்தில் தொடங்க உள்ள நிலையில் கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது குறித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வழக்கறிஞருடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். அவர் வந்த பிறகு ஆலோசித்து முடிவெடுப்போம்.
இவ்வாறு கே.என். நேரு கூறினார்.