தமிழகத்தில் 2 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தலை நடத்த எந்த முடிவும் எடுக்கவில்லை என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 2 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தலை நடத்த எந்த முடிவும் எடுக்கவில்லை என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத்தின் பதவிக் காலம் வரும் மே 24ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதனால் சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகம் வந்த இந்தியத் தேர்தல் ஆணைய தலைமை செயலர் உமேஷ் சின்ஹா அடங்கிய குழு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தேர்தல் பற்றி ஆலோசனை மேற்கொண்டது.
அதிமுக, திமுக உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த கோரிக்கை விடுத்துள்ளன. இதேபோல மே மாதம் கடும் வெயிலாக இருக்கும் என்பதால் முன் கூட்டியே தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்திடம் அதிமுக கோரிக்கை வைத்தது. ஆனால், கூடுதல் வாக்குச்சாவடிகளை அமைக்க வேண்டி இருப்பதால் தமிழகத்தில் முன் கூட்டியே தேர்தல் நடத்தப்படுவதற்கு வாய்ப்பு இல்லை என்று தமிழக தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாஹு தெரிவித்துவிட்டார்.
இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தல், உருமாறிய கொரோனா ஆகியவை காரணமாக தமிழகத்தில் முதல்முறையாக 2 கட்டங்களாக சட்டமன்றத் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் நேற்று வெளியாகி இருந்தது.
இந்நிலையில், 2 கட்டங்களாக தேர்தல் நடத்துவதற்காக தேர்தல் ஆணையத்திற்கு எந்த பரிந்துரையும் தான் மேற்கொள்ளவில்லை. தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட வேண்டுமா அல்லது 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட வேண்டுமா என்ற பரிந்துரையை தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு அந்தந்த மாநில தேர்தல் அதிகாரிதான் பரிந்தரையை அளிக்க வேண்டும். ஆனால், இதுவரை எந்த பரிந்துரையும் தான் அளிக்கவில்லை என சத்யபிரதா சாகு தகவல் தெரிவித்துள்ளார்.