ஆப்பரேசன் ஆப்போசிசன் லீடர்..! சைலண்டாக காய் நகர்த்தும் எடப்பாடியார்..! கப்சிப் ஓபிஎஸ்..!

By Selva KathirFirst Published May 4, 2021, 11:01 AM IST
Highlights

அதிமுக இப்போது உள்ளது போல் தனது முழுக்கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்றால் எதிர்கட்சித் தலைவர் பதவி அவசியம் என்று எடப்பாடி பழனிசாமி கருதுகிறார். 

அதிமுக எதிர்கட்சி அந்தஸ்தை கூட பெறாது என்று ஊடகங்கள் கூறி வந்த நிலையில் வலுவான ஒரு எதிர்கட்சியாகவே அதிமுக உருவெடுத்துள்ளது.

சட்டப்பேரவை தேர்தலில் 66 இடங்களில் வென்று கடந்த 2006ம் ஆண்டில் ஜெயலலிதா இருந்த போது இருந்த அதிமுக போன்ற ஒரு நிலை தற்போது உருவாகியுள்ளது. கடந்த முறை ஜெயலலிதா இருந்தார். அவர் எதிர்கட்சித்தலைவராக ஓ.பன்னீர் செல்வத்தை நியமித்தார். பிறகு சிறிது நாட்களுக்கு பிறகு ஜெயலலிதாவே எதிர்கட்சித்தலைவர் ஆனார். அப்போது அதிமுகவிற்கு ஒற்றைத் தலைமை. எனவே எதிர்கட்சித்தலைவரை தேர்வு செய்வது எளிமையாகிவிட்டது. ஆனால் தற்போது அப்படி அல்ல. அதிமுகவில் ஓபிஎஸ் – இபிஎஸ் என இரட்டைத்தலைமை. இவர்களில் எதிர்கட்சித்தலைவர் பதவியை இருவருமே விரும்புவதாக தெரிகிறது.

முதலமைச்சர் வேட்பாளர் பதவியை விட்டுக்கொடுத்த தனக்கு எதிர்கட்சித்தலைவர் பதவியை கொடுக்க வேண்டும் என்று ஓபிஎஸ் கருதுகிறார். தனது விருப்பத்தை அவர் ஏற்கனவே கட்சியின் சீனியர்களிடம் தெரிவித்துவிட்டார். இது குறித்து விவாதிக்க கே.பி.முனுசாமி தருமபுரியில் இருந்சூ நேரடியாக தேனியில் ஓபிஎஸ் வீட்டிற்கே சென்றுவிட்டார். அங்கு சுமார் நான்கு மணி நேரத்திற்குமேல் இந்த ஆலோசனை நடைபெற்றுள்ளது. அப்போது எதிர்கட்சித்தலைவராக இபிஎஸ் தன்னை அறிவிக்க வேண்டும் என்று ஓபிஎஸ் விரும்புவதாகவும் ஆனால் அதனை பகிரங்கப்படுத்த வேண்டாம் என்கிற முடிவு எடுக்கப்பட்டதாகவும் சொல்கிறார்கள்.

இதே போல் அதிமுக இப்போது உள்ளது போல் தனது முழுக்கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்றால் எதிர்கட்சித் தலைவர் பதவி அவசியம் என்று எடப்பாடி பழனிசாமி கருதுகிறார். மேலும் அடுத்தடுத்த தேர்தல்களில் முக்கிய பங்கு வகிக்கவும் கட்சியில் மட்டும் அல்ல அரசியல் களத்திலும் சுறுசுறுப்பாக இயங்க எதிர்கட்சித்தலைவர் பதவி உதவும் என்பது அவரது கணக்கு. இதற்காக தனது ஆதரவாளர்களை ஏற்கனவே எடப்பாடியார் ஒன்று திரட்ட ஆரம்பித்துவிட்டதாக சொல்கிறார்கள். ஆனால் தேர்தலுக்கு முன்பிருந்த ஒத்துழைப்பு தற்போது எடப்பாடியாருக்கு பிறரிடம் இருந்து இல்லை என்கிறார்கள்.

தேர்தலுக்கு முன்பு வரை எடப்பாடியாருக்கு வலது புறமாகவும் இடதுபுறமாகவும் இருந்த இரண்டு அமைச்சர்கள் கூட இந்த விஷயத்தில் வெளிப்படையாக எடப்பாடியாரை ஆதரிக்க தயாராக இல்லை என்கிறார்கள். இதே போல் சீனியர் அமைச்சராக இருந்த ஒருவரும் எதிர்கட்சித்தலைவர் பதவிக்கு ஆசைப்படுவதாக கூறுகிறார்கள். இவை எல்லாவற்றையும் கணக்கில் கொண்டே அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டியுள்ளது. அங்கு வைத்து இதைப்பற்றி பேசிக் கொள்ளலாம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் தேர்தலுக்கு முன்பு வரை அதிமுக எடப்பாடியாரின் முழுக்கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால் அந்த நிலை தற்போது இல்லை என்பது தெளிவாக உள்ளது. இதனால் சைலன்டாக எதிர்கட்சி தலைவர் பதவிக்கு எடப்பாடியார் காய் நகர்த்த ஆரம்பித்துள்ளதாக சொல்கிறார்கள்.

click me!