
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் அருளால் இந்த ஆண்டு நல்ல மழை பெய்து கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பினால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்படும் என்று நாளை மறுநாள் கர்நாடக முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ள குமாரசாமி தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் எடியூரப்பா ராஜினாமாவை தொடர்ந்து மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவர் குமாரசாமி வருகிற 23-ம் தேதி முதலமைச்சராக பதவி ஏற்க இருக்கிறார்.
38 இடங்களில் வெற்றி பெற்ற ஜே.டி.எஸ். கட்சிக்கு 78 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் ஆதரவு அளிக்கிறது. மெஜாரிட்டிக்கு 112 எம்.எல்.ஏ.க்கள் தேவை என்ற நிலையில், அதையும் தாண்டி 6 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு குமாரசாமிக்கு உள்ளது.
இதற்கிடையே, கர்நாடக தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களின் சான்றிதழ்களை வைத்து சிறப்பு பூஜை நடத்த குமாரசாமி இன்று ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு வந்தார். சிறப்பு பூஜைகள் நடத்திய பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது காங்கிரஸ் கட்சிக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுப்பது தொடர்பாக இப்போது எதுவும் செய்ய முடியாது என்றும், பதவி ஏற்பு விழாவில் கலந்துக்கொள்ள திமுக செயல்தலைவர் முக ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது என்றும் தெரிவித்தார்.
காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளம் கர்நாடகாவில் 5 ஆண்டு பதவி காலத்தை பூர்த்தி செய்யும் என்று உறுதிபடத் தெரிவித்தார்.
தமிழக – கர்நாடக மாநிலங்களிடையே தகித்துக் கொண்டிருக்கும் காவிரி விவகாரம் தொடர்பாக குமாரசாமி பேசும் போது, இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் காவிரி பிரச்னைக்கு தீர்வு காண்பதுதான் நல்லது என்று தெரிவித்தார்.
மூன்று ஆண்டுகளாக போதிய மழையின்மை காரணமாக கர்நாடக அணைகளில் தண்ணீர் கிடையாது என்று கூறிய குமாரசாமி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் அருளால் இந்த ஆண்டு நல்ல மழை பெய்து அணைகள் நிரம்பினால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்படும் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய குமாரசாமி, காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மதித்து கர்நாடக அரசு செயல்படும் எனவும் குறிப்பிட்டார்.