
அதிமுக இரண்டாக உடைந்து பிளவு ஏற்பட்டுள்ளதை, காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் கே.ஆர்.ராமசாமி, முட்டை கதையை கூறி, மானிய கோரிக்கை விவாதத்தின்போது பேசினார். இதற்கு அதிமுக அமைச்சர்களும் பதிலடி கொடுத்து பேசினர்.
காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம சட்டமன்றத்தில் நேற்று நடந்தது. அப்போது, காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் கே.ஆர்.ராமசாமி, பேசியதாவது:-
நான் இப்போது ஒரு கதை சொல்ல விரும்புகிறேன். அந்த கதையில் ஒரு தாய் தனது மகனை அழைத்து கடைக்கு போய் முட்டை வாங்கி வரும்படி பணம் கொடுத்து அனுப்பினார். அந்த மகனும் கடைக்கு சென்று முட்டை வாங்கி கொண்டு வேகமாக ஓடி வந்தார்.
அப்போது ஒரு கல் தடுக்கி விட்டு, அவன் சாலையில் விழுந்தான். அப்போது, அவனிடம் இருந்த முட்டையும் உடைந்துவிட்டது. முட்டையில் இருந்த வெள்ளை கரு, மஞ்சள் கரு தனிதனியாக பிரிந்தது. இரண்டையும் அவன் ஒட்டி பார்க்கிறான். ஆனால், ஒட்டவில்லை.
அவன் வீட்டிற்கு சென்றவுடன், தாய் அவனிடம் முட்டை எங்கே என்று கேட்கிறார். அவன் அழுது கொண்டே முட்டை கீழே விழுந்து விட்டது. அதை எடுத்து ஒட்ட வைக்க முடியவில்லை என்றான்.
அதற்கு அந்த தாய் கூறுகையில், உடைந்த முட்டை எப்போதுமே ஒட்டாது. நீ ஏன் முட்டாள்தனமாக அழுகிறாய் என்று கூறியதாக தெரிவித்து கதையை சொல்லி முடித்தார்.
அப்போது, அவையில் இருந்த திமுக உறுப்பினர்கள் மேஜையை தட்டினர். இதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து அமைச்சர் தங்கமணி பேசுகையில், “தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி உடைந்து எத்தனை கோஷ்டியாக இருக்கிறது என்பதை உறுப்பினர் மறந்து விடக்கூடாது” என்றார்.
அவரை தொடர்ந்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், தமிழக காங்கிரசில் இருந்த முட்டையும் உடைந்து, கருவும் உடைந்துவிட்டது. இனி நீங்கள் தலை தூக்க முடியாது என கூறினார்.
இதையடுத்து, அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், “காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் காணும் கனவு என்றைக்கும் பலிக்காது. எதிர்க்கட்சி உறுப்பினரின் எண்ணம் நிச்சயம் நிறைவேறாது. பொறுத்து இருந்து பாருங்கள். எல்லாம் சரியாகி விடும் என கூறினார்.
அதன்பின்னர், மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்து. அப்போது பேசிய துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அதிமுகவில் உள்ள 132 எம்எல்ஏக்களும் ஒற்றுமையாக இருக்கிறோம். ஒரு தாய் இத்தனை பிள்ளைகளை பெற்றால், உடல் தாங்காது. இதனால், தனித்தனி தாயின் வயிற்றில் நாங்கள் பிறந்தோம். எங்கள் மீது நீங்கள் கொண்ட அக்கறைக்கு நன்றி என்றார்.