'பீஸ்ட்' வேகத்தில் SP வேலுமணி.. 'மாஸ்டர்' ஸ்கெட்ச் போடும் செந்தில் பாலாஜி..கோவையை கைப்பற்றப் போவது யார் ?

By Raghupati RFirst Published Feb 18, 2022, 1:21 PM IST
Highlights

சென்னைக்கு அடுத்தப்படியாக அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குகிறது கோவை. இப்படியிருக்க, இந்த கோவையை அதிமுக தனது கோட்டையாக வைத்திருக்கிறது. இதனை திமுக கைப்பற்றுமா ? என்ற கேள்வி எழுந்து இருக்கிறது.

கோவையைத் தக்க வைத்துக்கொள்ள முன்னாள் அமைச்சர் வேலுமணி முயற்சி எடுத்து வரும் நிலையில், அம்மாவட்ட பொறுப்பு அமைச்சரான செந்தில் பாலாஜி மாநகராட்சியைக் கைப்பற்ற முயன்று வருகிறார். அதிமுகவின் கோட்டையாக இருக்கும் கோவை மாவட்டத்தை திமுகவின் கோட்டையாக மற்ற வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி கோவையிலேயே முகாமிட்டு வேலை செய்து வருகிறார்.

எஸ்.பி வேலுமணியை எதிர்க்க துணிச்சலான, அவர்களை பற்றி தெரிந்த ஒரு ஆள் தான் வேண்டும் என்பதற்காக, நேக்காக அங்கு அமைச்சர் செந்தில்பாலாஜியை களமிறக்கினார் முதலமச்சர் ஸ்டாலின். அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தவர் அமைச்சர் செந்தில்பாலாஜி. அங்கிருப்பவர்களின் தேர்தல் வியூகம் அவருக்கு அத்துப்பிடி. அப்படியிருக்க அங்கு அவரை தேர்தல் ஆலோசகராக நியமித்தால் நிச்சயம் எஸ்.பி.வேலுமணியின் செல்வாக்கை நிச்சயம் குறைக்க முடியும் என தீர்க்கமாக நம்புகிறார்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றிய திமுக, கோவையில் 10 தொகுதியில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாதது முதலமைச்சருக்கு மிகுந்த வருத்தத்தை  கொடுத்துள்ளது. ஆகவே எதிர்வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் எப்படியேனும் கோவையில் அதிமுகவை காட்டிலும் அதிக இடங்களை கைப்பற்றியே ஆகவேண்டும் என்ற முனைப்புடன் முதலமைச்சரும், அமைச்சர் செல்ந்தில்பாலாஜியும் ஈடுபட்டு வருகின்றனர். 

அமைச்சர் செந்தில் பாலாஜியே நேரடியாக களத்தில் இறங்கி நகர்ப்புற ஏழைகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் நகர்புற வேலை வாய்ப்புத் திட்டத்தை செயல்படுத்துவது, கோயம்புத்தூர் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என அனைத்து இடங்களுக்கும் தனிதனி குழு அமைத்து மக்களின் அன்றாட பிரச்சனைகளை தீர்ப்பது, பென்ஷன், ரேஷன் அட்டை பெற்று தருவது என அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து வருகிறார்.

நேற்று நள்ளிரவு சிங்காநல்லூர் தொகுதியில் அவர்களின் மனைவி போட்டியிடும் ward-ல், Hotbox கொடுக்க முயன்றதை தடுத்து, Flying squad-இடம் எடுத்துக் கூறினோம். சரி சொன்ன உதவித் தொகை மாதம் 1000/- தான் கொடுக்கல, Hotbox வச்சு சமாளிக்கலாம்-னு நினைச்சா? கோவை மக்கள் புத்திசாலிகள்! pic.twitter.com/y9kF9JoyuB

— Singai G Ramachandran (@RamaAIADMK)

திமுகவினர் ஹாட் பாக்ஸ்களை கொண்டு வந்து விநியோகம் செய்வதாக அதிமுகவினர் குற்றம்சாட்டுகின்றனர். நேற்று முன் தினம் கோவையில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, 70 லாரிகளில் ஹாட் பாக்ஸுகள் வந்து இறங்கியிருக்கிறது. இதுஎல்லாம் தேர்தல் அதிகாரிகளுக்கும், காவல் துறையினருக்கும் தெரியாதா என்று கேள்வி எழுப்பினார். அதோடு திமுக கொடுக்கும் பரிசுகளை வாங்கிக் கொண்டு, அதிமுகவுக்கு வாக்களியுங்கள்' என்றார். சமூக வலைதளங்களில் வாக்காளர்களுக்கு ஹாட் பாக்ஸ் கொடுப்பது போன்ற காட்சிகள் வெளியாகி வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

திமுக வட்டாரங்களில் விசாரித்தோம். ‘ஒரு பூத்துக்கு பத்து பேர் கொண்ட ஒரு குழுவை அமைச்சர் செந்தில் பாலாஜி அமைத்துள்ளார். ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு பொறுப்பாளரை நியமித்துள்ளார். அவர்கள் அனைவரும் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களை வைத்துத்தான் ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய், வீட்டுக்கு ஒரு ஹாட் பாக்ஸ் கொடுத்து உதயசூரியனுக்கு வாக்குகளை சேகரித்து வருகிறோம்’ என்று கூறினர். 

திமுக முகாம் இப்படி இருக்க, அதிமுக வட்டாரங்களில் சிலரிடம் பேசினோம். ‘கோவையின் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் அம்மன் அர்ஜுனன், பி.ஆர்.ஜி.அருண்குமார் ஆகியோரோடு அடிக்கடி கூட்டங்கள் நடத்தி முடுக்கிவிட்டுக் கொண்டே இருக்கிறார் வேலுமணி. கடந்த சட்டமன்றத் தேர்தலில் எப்படி செய்தோமோ அதே மாதிரி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் நாம் ஜெயிக்க வேண்டும். என்ன செலவானாலும் பரவாயில்லை ? என்று கறாராக ஆர்டர் போட்டு இருக்கிறார் வேலுமணி. 

இருப்பினும் மேலிடத்திலிருந்து வருகிற உளவுத் துறை தகவல்கள், போலீஸ் ரிப்போர்ட் ஆகியவற்றை உடனுக்குடன் தெரிந்துகொண்டு அதிமுகவினரின் நகர்வுகளுக்கு ஏற்ற மாதிரி காய் நகர்த்தி வருகிறார் செந்தில் பாலாஜி. கொங்கு தன்னுடைய கோட்டை தான் என்று எஸ்.பி வேலுமணி நிரூபிப்பாரா ? அல்லது செந்தில் பாலாஜி கோவையை தனதாக்குவாரா ? என்ற கேள்விக்கு தேர்தல் முடிவு வரும் வரை காத்திருப்போம்.

click me!