ஈரோடு, கோவையை இரண்டாகப் பிரியுங்கள்... ‘கொங்கு’ ஈஸ்வரன் அதிரடி கோரிக்கை!

By Asianet TamilFirst Published Jul 18, 2019, 9:58 PM IST
Highlights

அதிக மக்கள்தொகையைக் கொண்ட கோயம்புத்தூர் மாவட்டத்தை பொள்ளாச்சியைத் தலைமையிடமாகவும், ஈரோடு மாவட்டத்தை கோபிசெட்டிபாளையத்தை தலைமையிடமாகவும் கொண்டு புதிய மாவட்டங்களாக அறிவிக்க முன்வர வேண்டும்.
 

கோயம்புத்தூர், ஈரோடு ஆகிய கொங்கு மண்டலங்களை பிரிக்குமாறு தமிழக அரசுக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் திரு நெல்வேலியிலிருந்து தென்காசியை பிரித்து தனி மாவட்டமாகவும், காஞ்சிபுரத்திலிருந்து செங்கல்பட்டைப் பிடித்து தனி மாவட்டகவும் முதல் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். ஏற்கனவே விழுப்புரத்திலிருந்து கள்ளக்குறிச்சியைப் பிரித்து தனி மாவட்டமாக தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் கொங்கு பகுதியில் ஈரோடு, கோவையை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று  கொங்கநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


அந்த அறிக்கையில், “நெல்லை மாவட்டத்தை பிரித்து தென்காசியையும் காஞ்சிபுரம் மாவட்டத்தை பிரித்து செங்கல்பட்டையும் தனி மாவட்டங்களாக சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் அவர்கள் அறிவித்திருப்பது வரவேற்புக்குரியது. கொங்கு மண்டலத்தில் உள்ள பெரிய மாவட்டங்களான ஈரோடு, கோயம்புத்தூரை இரண்டாகப் பிரிக்க வேண்டுமென்ற அந்த மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கைக்கு தமிழக அரசும், தமிழக முதலமைச்சரும் செவிசாய்க்காமல் இருப்பது வேதனையளிக்கிறது.


நிர்வாக வசதிக்காக தமிழகத்தில் உள்ள பெரிய மாவட்டங்களை எல்லாம் இரண்டாகப் பிரித்து புதிய மாவட்டங்களாக உருவாக்குவதன் மூலம் அரசு சார்ந்த பணிகளை மக்களுக்கு தமிழக அரசு விரைவாக வழங்க முடியும். கடைநிலையில் உள்ள கிராமத்துக்கு அரசு திட்டங்களை கொண்டு சேர்க்க வேண்டுமென்றாலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மக்கள் எளிதாக வந்து செல்ல வேண்டுமென்றாலும் பெரிய மாவட்டங்களை இரண்டாகப் பிரிப்பது மட்டும்தான் ஒரே தீர்வு.
பெரிய மாவட்டங்களாக இருப்பதால் பல்வேறு மக்கள் பிரச்சினைகள் ஆண்டுக்கணக்கில் தீர்க்கப்படாமல் கிடப்பில் போடப்படுகிறது. கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டுமென்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பாக பலமுறை தமிழக அரசுக்கு கோரிக்கையை வைத்து வருகிறோம்.


இவ்விரு மாவட்டங்களில் அதிக தொழிற்சாலைகளும் இருக்கிறது. மற்ற மாவட்டங்களை இரண்டாகப் பிரித்து அறிவிப்பை வெளியிடும் தமிழக முதலமைச்சர், அதிக மக்கள்தொகையைக் கொண்ட கோயம்புத்தூர் மாவட்டத்தை பொள்ளாச்சியைத் தலைமையிடமாகவும், ஈரோடு மாவட்டத்தை கோபிசெட்டிபாளையத்தை தலைமையிடமாகவும் கொண்டு புதிய மாவட்டங்களாக அறிவிக்க முன்வர வேண்டும்.
கோயம்புத்தூர், ஈரோடு மாவட்டங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தமிழக முதலமைச்சர் அவர்களிடம் இதனை வலியுறுத்த வேண்டுமென்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்” என்று அந்த அறிக்கையில் ஈஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

 

click me!