மர்ம நாடாகிப்போன கோடநாடு எஸ்டேட் … ஜெ., சசி. பயன்படுத்திய அறையின் சுவர்களை ஸ்கேன் பண்ண  ஐ.டி.அதிகாரிகள் திட்டம் ..

First Published Nov 14, 2017, 1:46 PM IST
Highlights
kodanadu estate scane


மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோர் ஓய்வெடுக்கும் கோடநாடு பங்களாவில் அவர்களது அறையின் சுவர்களை ஸ்கேன் செய்து உள்ளே எதுவும் புதைக்கப்பட்டிருக்கிறதா என சோதனை நடத்த வருமான வரித்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

சசிகலாவின் உறவினர்களுக்கு  சொந்தமான பல இடங்களில் கடந்த 9 ஆம் தேதி முதல் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தினர்.

சென்னை, தஞ்சை, மன்னார்குடி, நாமக்கல், திருச்சி, கோவை, கோடநாடு உள்ளிட்ட,187 இடங்களில் 1800 அதிகாரிகள் நடத்திய இந்த சோதனையில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. கணக்கில் வராத தங்கம் மற்றும் வைர நகைகளும் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை ஈக்காட்டுதாங்கலில் உள்ள ஜெயா டி.வி. அலுவலகம், அதன் தலைமை செயல் அதிகாரியும், சசிகலாவின் அண்ணன் மகனுமான விவேக்கின் மகாலிங்கபுரம் வீடு, அலுவலகம், அவரது சகோதரி கிருஷ்ணபிரியாவின் வீடு, சென்னையை அடுத்த படப்பையில் உள்ள மிடாஸ் மதுபான ஆலை ஆகிய இடங்களில் நேற்று 5-வது நாளாக வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

ஜெயா டிவி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நேற்று நிறைவு பெற்ற நிலையில் கோடநாட்டில் உள்ள கர்சன் எஸ்டேட்டில் 6வது நாளாக இன்றும் சோதனை நடைபெற்று வருகிறது. எஸ்டேட்டின் மேலாளர் நடராஜனிடம் கடந்த 3 நாட்களாக அதிகாரிகள் துருவி துருவி விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே கோடநாடு எஸ்டேட்டில் ஜெயலலிதாவும், சசிகலாவும் மட்டும் பயன்படுத்திய அறையை சோதனையிட வருமான வரித்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.  அதற்காக சுவர்களை ஸ்கேன் செய்யும் நவீன கருவிகளுடன் காத்திருக்கும் அதிகாரிகள், மேலிட அனுமதி கிடைத்தவுடன் சோதனையை தொடங்குவார்கள் என எதிர்ப்க்கப்படுகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி கோடநாடு எஸ்டேட்டுக்குள் புதையல் இருப்பதாகவும், அதைக் கைப்பற்ற மர்ம கும்பல் ஒன்று உள்ளே நுழைய முயற்சி செய்தபோது ஓம் பகதூர் என்ற காவலாளி கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் வருமான வரித்துறையினரே கோடநாடு எஸ்டேட் பங்களாவின் சுவர்களை ஸ்கேன் செய்து பார்க்க முடிவு செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

click me!