
கொடநாடு எஸ்டேட் மேல் தொடர்ந்து 3 நாட்களாக ட்ரோன் பறந்ததாக எஸ்டேட் மேற்பார்வை அலுவலர் ராமகிருஷ்ணன் போலீசில் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ம் தேதி கொள்ளை முயற்சி நடந்தது. இதில், காவலாளி ஓம் பகதூர் (50) கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக சயான், மனோஜ் உள்பட 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ஊட்டி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதனிடையே, ஆட்சி மாற்றம் ஏற்பட்டதற்கு பிறகு இந்த வழக்கில் திடீர் திருப்பமாக நீதிமன்றம் அனுமதி பெற்று, சயானிடம் போலீசார் மறு விசாரணை நடத்தி, ரகசிய வாக்குமூலம் பெற்றனர். அதில் வழக்கில் முக்கிய நபர்களுக்கு தொடர்பு இருப்பது குறித்து கூறியதாக தெரிகிறது. மேலும் விபத்தில் இறந்த ஜெயலலிதா கார் டிரைவர் கனகராஜின் அண்ணன் தனபால், சம்பவம் நடந்த நாளில் கோத்தகிரி மற்றும் கூடலூரில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் 3 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில், கோடநாடு எஸ்டேட் மேல் தொடர்ந்து 3 நாட்களாக ட்ரோன் பறந்ததாக புகார் எழுந்துள்ளது. கோடநாடு எஸ்டேட் மேற்பார்வை அலுவலர் ராமகிருஷ்ணன், சோலூர் மட்டம் காவல்நிலையத்தில் இது தொடர்பாக இன்று புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில், சோலூர்மட்டம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.