கொடநாடு விவகாரத்தில் நான் வெளியிட்டிருப்பது வெறும் 5% ஆதாரங்கள்தான்!! பகீர் கிளப்பும் மேத்யூஸ்...

By sathish kFirst Published Jan 16, 2019, 10:13 AM IST
Highlights

‘கொடநாடு விவகாரத்தில் நான் இதுவரை வெளியிட்டிருப்பது வெறும் 5% ஆதாரங்கள்தான். மீதம் இருப்பவற்றையும் வெளியிட்ட பின்பு இதுவரை பேசாத மீடியாக்களும் பேசாமல் இருக்க முடியாது’ என்று தன் நண்பர்களிடம் பகிர்ந்துகொண்டிருக்கிறாராம் மேத்யூஸ்.

கொடநாடு கொலை, கொள்ளை படம் பற்றிய ஆவணப்படம் வெளியிட்ட பத்திரிகையாளர் மேத்யூஸ் சாமுவேல் இதன் அடுத்தகட்டம் பற்றிய தீவிர ஆலோசனையில் இருப்பதாக டெல்லியில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக போலீஸாரால் டெல்லியில் கைது செய்யப்பட்ட சயன், மனோஜ் ஆகியோர் எழும்பூர் நீதிபதி சரிதாவால் விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில் டெல்லியில் இருக்கும் மேத்யூஸ் தனது பத்திரிகை நண்பர்களிடம் இந்த விவகாரம் குறித்து மனம்விட்டுப் பேசியிருக்கிறார்.

“டெல்லி என்பது சென்னை மாநகரத்தின் நெருக்கடியை விட பல மடங்கு நெருக்கடி கொண்ட மாநகரம். இங்கே சயன், மனோஜ் ஆகிய இருவரையும் தேடிவந்த தமிழக போலீஸ் டெல்லி வந்த அடுத்த நாளே ஒரு காபி ஷாப்பில் இருந்த இருவரையும் கரெக்ட்டாக அறிந்துவந்து கைது செய்து அதேவேகத்தில் கொண்டு போனது. இதில் இங்கிருக்கும் சில தமிழ் பத்திரிகையாளர்கள் மீது கோபத்திலும் வருத்தத்திலும் இருக்கிறார் மேத்யூஸ்.  

இந்த ஆவணப் படத்தை வெளியிடுமாறு அவர் ஏற்கெனவே சில தேசிய மீடியாக்களை அணுகியுள்ளார். ஆனால், ஒரு மாநில முதல்வரை எதிர்த்து இப்படிப்பட்ட கடுமையான குற்றச்சாட்டுகளை வைக்கும் ஆவணப்படத்தை வெளியிட மறுத்துவிட்டனர். பின் டெல்லியிலேயே ஒரு டிவி சேனல் இதை வெளியிட முன்வந்து பின் அதுவும் மாறிவிட்டது. தான் வீடியோ வெளியிட்டு நான்கைந்து நாட்கள் ஆன பின்னாலும் தேசிய மீடியாக்கள் இந்த விஷயத்தில் வேண்டுமென்றே மௌனம் காப்பதற்குப் பின்னால் அரசியல் இருப்பதை மேத்யூஸ் உணர்ந்திருக்கிறார்.

ஆனால், இந்தச் சூழலில்தான் எழும்பூர் மாஜிஸ்திரேட் சரிதாவின் மிகச் சரியான தீர்ப்பு மேத்யூஸை இன்னும் தீவிரமாகச் செயல்படுவதற்கு உரமாக அமைந்திருக்கிறது என்றும் சொல்கிறார்கள் மேத்யூஸின் நண்பர்கள்.

தேசிய மீடியாக்கள் இதை ஒரு பொருட்டாக கருதாததற்குப் பின்னால் அரசியல் இருப்பதை உணர்ந்திருக்கும் மேத்யூஸ்... சயன், மனோஜ் ஆகியோரின் உடனடி விடுதலையால் தெம்பாகியிருக்கிறார். ‘கொடநாடு விவகாரத்தில் நான் இதுவரை வெளியிட்டிருப்பது வெறும் 5% ஆதாரங்கள்தான். மீதம் இருப்பவற்றையும் வெளியிட்ட பின்பு இதுவரை பேசாத மீடியாக்களும் பேசாமல் இருக்க முடியாது’ என்று தன் நண்பர்களிடம் பகிர்ந்துகொண்டிருக்கிறாராம் மேத்யூஸ்.

மேத்யூஸின் நடவடிக்கைகளைக் கவனிப்பதற்காக டெல்லிக்கு ஒரு டீமை அனுப்பி வைத்திருப்பதாகவும் தகவல். அவரை உடனடியாக கைது செய்ய தமிழக போலீஸுக்குத் திட்டமில்லை என்றாலும் மேத்யூஸின் மூவ்மெண்ட்டுகளைத் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருக்கிறது.  மேத்யூஸ் ரிலாக்ஸ் ஆக இருக்கும் ஒவ்வொரு கணமும் தமிழக முதல்வருக்கும் போலீஸ்  ஆபீசர்களும் செம்ம டென்ஷனில் இருக்கிறார்களாம்.

click me!