விஜய்சேதுபதி மன்னிப்பு கேட்கும் வரை உதை.. ஒரு உதைக்கு ரூ.1001 பரிசு.. இந்து மக்கள் கட்சி சர்ச்சை அறிவிப்பு.!

By Asianet TamilFirst Published Nov 8, 2021, 10:19 AM IST
Highlights

“பெங்களூர் விமானத்தில் நிலைதவறிய நிலையில் ஒருவர் என்னை அணுகினார். நான் பிறகு பேசலாம் என்றேன். ஆனால், நீ என்  ஜாதிதான பேசுப்பா, நானும் நடிகன்தான் என்பது போல சத்தமாக கேட்டப்படி வந்தார்." 

தேவர் அய்யாவை இழிவுபடுத்தியதற்காக நடிகர் விஜய் சேதுபதியை உதைப்பவருக்கு ரொக்கப்பரிசு ரூ.1001 வழங்கப்படும் என்று இந்து மக்கள் கட்சி சர்ச்சையான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

கடந்த 3-ஆம் தேதி பெங்களூரு விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சூழ நடந்துசென்ற நடிகர் விஜய் சேதுபதியை, பின்னால் ஓடி வந்த ஒரு நபர் எகிறி எட்டி உதைத்த வீடியோ காட்சி சமூக ஊடகங்களில் வைரலானது. விஜய் சேதுபதி தாக்கப்பட்டதற்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் பெங்களூரு விமான நிலையத்தில் விஜய் சேதுபதி தாக்கப்பட்டதாகப் பரவும் செய்தி உண்மையில்லை என்று பெங்களூரு போலீஸார் மறுப்பு தெரிவித்திருந்தனர்.

மேலும், விமான நிலையத்தில் விஜய் சேதுபதிக்கு வழி ஏற்படுத்தும் முயற்சியில் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் விஜய் சேதுபதியின் உதவியாளர் மீதுதான் தாக்குதல் நடந்ததாகவும் பெங்களூரு போலீஸார் தெரிவித்திருந்தனர். அதேநேரத்தில் இந்த விவகாரத்தில் இரு தரப்பினரும் பேசி சமாதானம் ஆகிவிட்டதாகவும் கூறப்பட்டது. இந்த விவகாரத்தில் தாக்குதல் நடத்தியவர் மகா காந்தி என்பதும், நடிகர் விஜய்சேதுபதியோடு புகைப்படம் எடுக்கும் முயற்சியில்தான் மோதல் ஏற்பட்டதாகவும் மாறுப்பட்ட தகவல்கள் வெளியாயின. 

இந்நிலையில் இதுதொடர்பாக மகா காந்தி யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில், “அண்மையில் தேசிய விருது வாங்கிய விஜய் சேதுபதியிடம்  ‘விருது பெற்றதற்கு வாழ்த்துகள்’ என்றேன். விஜய்சேதுபதியோ, இது தேசமா? என்று கேட்டார். குருபூஜைக்கு ஏன் வரவில்லை என்று நான் அவரிடம் கேட்டேன். அதற்கு விஜய்சேதுபதி, குரு யார்? என்று கேட்டார். தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போதே என்னை  தாக்கினார்கள். அதனால்தான் நான் திருப்பி தாக்கினேன். இதுதொடர்பாக விமான நிலைய சிசிடிவி காட்சிகளை கேட்டுள்ளேன். அதன்மூலம் அவர்கள் என்னை தாக்கியதை நிருபிப்பேன்" என்று தெரிவித்திருந்தார். 

மகா காந்தியின் கருத்துக்கு நடிகர் விஜய் சேதுபதி எதிர்ப்பு தெரிவித்து நேற்று விளக்கும் அளித்தார். “பெங்களூர் விமானத்தில் நிலைதவறிய நிலையில் ஒருவர் என்னை அணுகினார். நான் பிறகு பேசலாம் என்றேன். ஆனால், நீ என்  ஜாதிதான பேசுப்பா, நானும் நடிகன்தான் என்பது போல சத்தமாக கேட்டப்படி வந்தார். மற்றபடி அவர் காணொளியில் சொல்வது போல தேசியத்தையும் தெய்வீகத்தையும் அதே சமயம் தமிழர்களையும் தன் உயிராக கருதி வாழ்ந்த தெய்வத்திருமகனார் பசும்பொன் அய்யா குறித்து நான் எதுவும் பேசவில்லை.” என்று தெரிவித்திருந்தார். மேலும், “தொடர்ந்து அவதூறு செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்” என்றும் விஜய் சேதுபதி எச்சரித்திருந்தார்.

இரு தரப்புக்குமான இந்த மோதலில் தற்போது இந்து மக்கள் கட்சியும் குதித்துள்ள. இந்து மக்கள் கட்சி சார்பில் வெளியிடப்பட்ட ட்விட்டர் பதிவில், “தேவர் அய்யாவை இழிவுபடுத்தியதற்காக நடிகர் விஜய் சேதுபதியை உதைப்பவருக்கு ரொக்கப்பரிசு ரூ.1001/- வழங்கப்படும் என்று அர்ஜூன் சம்பத் அறிவித்துள்ளார். விஜய் சேதுபதி மன்னிப்பு கேட்கும் வரை அவரை உதைப்பவருக்கு 1 உதை = ரூ.1001/-” என்று நேற்று தெரிவித்திருந்தது.  இந்நிலையில் நேற்று இரவு வெளியிட்ட இன்னொரு ட்விட்டர் பதிவில், “இதுவரை விஜய் சேதுபதி எந்த விளக்கமும் அளிக்காததால் விஜய் சேதுபதிக்கு இந்த எச்சரிக்கை..!!!!” என்று இந்து மக்கள் கட்சி எச்சரித்துள்ளது. இந்து மக்கள் கட்சியின் இந்த அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 

click me!