
திமுகவின் கோட்டை என சொல்லும் ஆயரம் விளக்கு தொகுதியில் ஏன் இன்னும் அடிப்படை பணிகளைகூட நிறைவேற்றவில்லை என பாஜக வேட்பாளர் நடிகை குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார். தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. வரும் சட்டமன்ற தேர்தலை அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பாஜக சந்திக்கிறது. இந்நிலையில் திமுகவின் கோட்டையாக ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் டாக்டர் எழிலன் நாகநாதன் களமிறக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஏகோபித்த மக்கள் ஆதரவு உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவரை எதிர்கொள்ள நடிகை குஷ்பு அந்தொகுதியில் களமிறக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் வேட்பாளர் குஷ்பு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். ஆயிரம் விளக்கு தொகுதிக்குட்பட்ட வைகுண்டபுரம், கக்கன் காலணி, காமராஜ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவருக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த பகுதி மக்களுக்கு பிரதான கோரிக்கையாக எதுவும் இல்லை சிறு சிறு கோரிக்கைகள்தான் உள்ளது. குறிப்பாக பட்டா வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. அதனை நிச்சயம் வாங்கி தருவோம் என வாக்குறுதியளித்தார்.
ஆயிரம் விளக்கு திமுகவின் கோட்டை என சொல்பவர்கள் ஏன் இங்கு அடிப்படை திட்டத்தை கூட நிறைவேற்றவில்லை என கேள்வி எழுப்பிய அவர், தேசிய அளவில் கொண்டுவந்துள்ள தூய்மை இந்தியா திட்டத்தை பிடிவாததாத்தால் நிறைவேற்றமால் இருப்பது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார்.