வெறுத்துப்போய் முடிவெடுத்த முக்கிய புள்ளிகள்... அதிமுகவை காப்பாற்றிக் கொண்டிருக்கும் கொரோனா..?

By Thiraviaraj RMFirst Published Jun 3, 2021, 4:36 PM IST
Highlights

ஈகோவை நீங்கள் விட்டொழிக்கவில்லை என்றால், இனிவரும் காலம் இலையுதிர் காலமாகிவிடும். மீண்டும் துளிர்க்க வைக்கும் ஆளுமை யாரிடம் இருக்கிறது?

கொரோனா மக்கள் வாழ்வில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வரும் வேளையில் கழகத்தை காக்கிறது என்று உடன்பிறப்புகள் சொல்வதுதான் வேதனை என பூன்குன்றன் வேதனை தெரிவித்துள்ளார். 

ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. சட்டமன்றத்தேர்தலுக்கு பிறகு ஓ.பி.எஸ்- எடப்பாடிக்குள் இருந்த ஒற்றுமையும் சிதைந்திருக்கிறது. இந்நிலையில் முன்பு ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் தனது முகநூல் பதிவில், ‘’ஒருங்கிணைப்போம்; ஒன்றிணைவோம்!  இந்த கதையை எத்தனை முறை சொன்னாலும், கேட்டாலும் இனிக்கிறது. இந்த இனிப்பை பலருக்கு சுவைக்கத் தெரியவில்லை. இது கதை அல்ல நிஜம்தானோ..!ஒரு முதியவருக்கு பல மகன்கள் இருந்தார்கள். ஆனால் அவர்கள் எப்பொழுதும் தங்களுக்குள் சண்டை போட்டுக்கொண்டே இருந்தார்கள். சண்டை போட வேண்டாம் என்று முதியவர் எவ்வளவோ சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை.

ஒருநாள் மகன்கள் எல்லோரையும் அவர் அழைத்தார். தம் பக்கத்தில் கட்டி வைத்திருந்த ஒரு விறகு கட்டை அவர்களுக்குக் காட்டி அதை முறிக்கும்படி சொன்னார். எல்லோரும் முயற்சி செய்து பார்த்தார்கள். ஒருவராலும் அந்தக் கட்டை முறிக்க முடியவில்லை. அதை அவர்களும் ஒப்புக்கொண்டார்கள். பிறகு அந்தக் கட்டை அவிழ்த்து, தனித்தனி குச்சிகளாக கொடுத்து முறிக்கும்படி சொன்னார். மிக சுலபமாக அந்தக் குச்சிகளை மகன்கள் முறித்துவிட்டார்கள். முதியவர் அதைச் சுட்டிக்காட்டி,''பார்த்தீர்களா? சேர்ந்து இருக்கிறவரையில் அந்தக் கட்டை யாராலும் முறிக்க முடியவில்லை. 

குச்சிகளைத் தனியாகப் பிரித்தால் சுலபமாய் முறிக்க முடிகிறது. இதுதான் வாழ்வின் ரகசியம். நீங்கள் சகோதர அன்பால் கட்டுப்பட்டு சேர்ந்திருக்கிறவரையில் உங்களை யாராலும் எதுவும் செய்ய முடியாது. நீங்கள் என்று பிரிகிறீர்களோ அன்றே உங்கள் எதிரிகள் உங்களை நசுக்கி விடுவார்கள்'' என்று அறிவுரை சொன்னார். அதன்பிறகு அவர் மகன்கள் ஒற்றுமையாய் வாழ்ந்தார்கள். இன்று கழகத்தின் நிலை இதுதான். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை. எனக்கு அரசியலில் ஆர்வம் இல்லை என்றாலும் சொல்லவேண்டியது என் கடமை. வெறுத்துப் போய் வேறு முடிவு எடுக்கும் மனநிலைக்கு நிர்வாகிகள் தள்ளப்பட்டு வருகின்றனர், சிலர் முடிவெடுத்துவிட்டார்கள் என்றும் தெரிகிறது. 

கொரோனா மக்கள் வாழ்வில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வரும் வேளையில் கழகத்தை காக்கிறது என்று உடன்பிறப்புகள் சொல்வதுதான் வேதனை. ஈகோவை நீங்கள் விட்டொழிக்கவில்லை என்றால், இனிவரும் காலம் இலையுதிர் காலமாகிவிடும். மீண்டும் துளிர்க்க வைக்கும் ஆளுமை யாரிடம் இருக்கிறது? சிந்தித்து பாருங்கள்’’ எனப்பதிவிட்டு உள்ளார்.

click me!