திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பயணம்.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு..!

By vinoth kumarFirst Published Jun 3, 2021, 3:29 PM IST
Highlights

மகளிரை தொடர்ந்து திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயண சலுகை வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மகளிரை தொடர்ந்து திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயண சலுகை வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகம் வந்த முதல் நாளே 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். ரேஷன் அரிசி அட்டைதாரர்கள் அனைவருக்கும் கொரோனா நிவாரணம் ரூ.4000 வழங்கப்படும், ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு,  தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை தமிழக அரசே காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஏற்கும், அனைத்து மகளிரும் சாதாரண கட்டண நகரப்பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம்,  உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் தொகுதிகள் வாரியாக மக்களிடம் பெற்ற கோரிக்கை மனுக்களை 100 நாள்களில் நிறைவேற்றும் திட்டம் ஆகியவற்றிற்கு கையெழுத்திட்டார். 

மகளிருக்கு நகர கட்டணப் பேருந்துகளில் இலவச பயணம் செய்வதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு போக்குவரத்துக் கழக கட்டுப்பாட்டில் இயக்கும் சாதாரண கட்டண நகரப்பேருந்துகளில் பயணம் செய்யும் பணிபுரியும் மகளிர், உயர்கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும், பேருந்து பயண அட்டையில் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. 

இதனிடையே, பெண்களைப் போல் திருநங்கையர்களும் இலவசமாக பயணிக்க உத்தரவிட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். சமூக வலைத்தளங்கள் மூலமாக கோரிக்கைகள் வைக்கப்பட்டதை அடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பெண்களைப் போலவே திருநங்கையரும் கட்டணமின்றிப் பயணிப்பது குறித்து பரிசீலித்து, உரிய முடிவு விரைந்து எடுக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளினை முன்னிட்டு தமிழக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பில்  மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கும் நகரப்புற அரசு பேருந்துகளில் இலவச பயண சலுகை வழங்க முதல்வர் ஆணையிட்டுள்ளார். ஊரடங்கு காலம் விலக்கிக் கொள்ளப்பட்டவுடன் இந்த ஆணை நடைமுறைக்கு வரும் என தெரிவித்துள்ளார். 

click me!