உத்தவ் தாக்கரேவுக்கு கை கொடுத்த பினராய் விஜயன்..!! மகாராஷ்டிராவுக்கு விரைந்தது கேரள மருத்துவக்குழு..!!

By Ezhilarasan BabuFirst Published Jun 1, 2020, 9:33 AM IST
Highlights

 சேர்க்கை முதல் நோயாளியை குணப்படுத்தி அனுப்புவது வரை பின்பற்றப்பட வேண்டிய நெறிமுறையை தீர்மானிப்பதில் இந்த குழுவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

மும்பையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி துணை கண்காணிப்பாளர் எஸ்.எஸ் சந்தோஷ் குமார் தலைமையிலான முதலாவது மருத்துவ குழு விரைந்துள்ளது. மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ்தாக்கரே கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் கேரள மருத்துவ குழு மும்பை சென்றடைந்துள்ளது.  கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது, இதுவரை உலக அளவில் 62 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 3.73 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர், இந்நிலையில் உலகில் கோவிட் நோய் அதிகமாக பரவும் நகரங்களில் இரண்டாவது இடத்தில் மும்பை நகரம் உள்ளது. 

நாட்டில் அதிக அளவில் கோவிட் நோயாளிகளை கொண்டதாகவும் மகாராஷ்டிரா மாநிலம் உள்ளது,  இந்நிலையில் 50 மருத்துவர்களையும் 100 செவிலியர்களும் அவசரமாக அனுப்பிவைக்குமாறு மகாராஷ்டிரா அரசு கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே சைலஜாவிடம் வேண்டிக் கேட்டுக் கொண்டது,  இந்நிலையில் அக்கோரிக்கைக்கு உடனே செவி சாய்த்த கேரள அரசு, முதற்கட்டமாக டாக்டர் சந்தோஷ்குமார், டாக்டர் அஜித் ஆகியோரை மும்பைக்கு அனுப்பிவைத்துள்ளது. தன்னலமற்ற பணிக்கு தயாராக உள்ள மருத்துவர்களும் செவிலியர்களும் இந்த குழுவில் உள்ளனர் எனவும், இவர்களுக்கான தங்குமிடம் மும்பை மாநகராட்சி ஏற்பாடு செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது, அது  உறுதியானதும் மற்றவர்களும் மும்பை புறப்பட தயாராக உள்ளனர்.

மகாலட்சுமி ரேஸ் கோர்ஸில்  அமைக்கப்படும் 600 படுக்கை  கொண்ட கொரோனா சிகிச்சை மருத்துவமனையில், இந்த குழு சிகிச்சை அளிக்க உள்ளது. காசர்கோடு மருத்துவகல்லூரி அகடமிக் பிளாக்கில் கோவிட் மருத்துவமனை அமைக்கப்பட்டபோது துவக்கத்தில் சிகிச்சைக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைத்தது டாக்டர் சந்தோஷ் குமார் தலைமையிலான மருத்துவக் குழுவாகும்.  மும்பையிலும் சுகாதார ஊழியர்களுக்கு பயிற்சி அளிப்பது,  தேவைக்கேற்ப மருத்துவமனையின் கட்டமைப்பை மறுசீரமைப்பு செய்வது,  சேர்க்கை முதல் நோயாளியை குணப்படுத்தி அனுப்புவது வரை பின்பற்றப்பட வேண்டிய நெறிமுறையை தீர்மானிப்பதில் இந்த குழுவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

click me!