
அரசியலுக்கு வருவதையும் தனது முதல்வர் ஆசையையும் வெளிப்படையாக தெரிவித்துவிட்ட கமல்ஹாசன், கட்சி தொடங்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவே தெரிகிறது. 100 நாட்களில் தேர்தல் வந்தால் தேர்தலை சந்திக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். இதையடுத்து கமலின் அரசியல் பிரவேசம் தமிழகத்தின் ஹாட் டாக்காக உள்ளது.
இந்நிலையில், தனியார் டிவி சேனல் ஒன்றுக்கு கமல் அளித்துள்ள பேட்டியில், பல்வேறு பரபரப்புத் தகவல்களை தெரிவித்துள்ளார்.
அந்த பேட்டியில் கமல் பேசியதாவது:
பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து அரசியல் குறித்து அறிவுரை கேட்டு வருகிறேன். கேஜ்ரிவாலுடனான சந்திப்பு அந்த மாதிரிதான். அவரை சந்தித்ததால் அவருடன் கூட்டணி வைக்கப்போகிறேன் என்று அர்த்தமில்லை. நான் சென்று கேஜ்ரிவாலை சந்திக்கவில்லை. அவர்தான் வந்து என்னை சந்தித்தார். நேரம் குறிப்பிட்டு கட்சி தொடங்க மாட்டேன். ஆனால் கண்டிப்பாக அரசியல் கட்சி தொடங்குவேன்.
திமுக, அதிமுக ஆகிய திராவிட கட்சிகளுக்கு எதிராகத்தான் எனது கட்சி இருக்கும். திராவிட கட்சிகளின் ஊழல்களை மக்கள் பார்த்துவிட்டார்கள். எனவே ஊழலுக்கு எதிராகத்தான் எனது கட்சியும் செயல்பாடுகளும் இருக்கும்.
நானும் ரஜினியும் நல்ல நண்பர்கள். அவரிடம் நான் அரசியலுக்கு செல்ல இருப்பதை தெரிவித்துவிட்டேன். அவர் ஒரு ஆன்மீகவாதி. எனவே பாஜகவுடனான கூட்டணிக்கு ரஜினி ஏற்றவர். ஆனால் நானோ பகுத்தறிவுவாதி, ஜாதிகளுக்கு அப்பாற்பட்டவன். ஆனால் கம்யூனிஸவாதி அல்ல. எந்த கட்சியுடனும் நான் கூட்டணி சேரமாட்டேன்.
இவ்வாறு கமல் தெரிவித்தார்.