ஆர்.பி.உதயகுமார் நாக்கை அடக்கி பேசாவிட்டால், அடுத்தடுத்த ஆடியோக்கள் வெளியிடப்படும் என ஓபிஎஸ் ஆதரவாளரும், மாவட்ட செயலாளருமான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார்.
ஆர்.பி.உதயகுமார் நாக்கை அடக்கி பேசாவிட்டால், அடுத்தடுத்த ஆடியோக்கள் வெளியிடப்படும் என ஓபிஎஸ் ஆதரவாளரும், மாவட்ட செயலாளருமான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார். ஒற்றை தலைமை பிரச்சனையில் தொடங்கி தற்பொது அதிமுகவினர் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் இரு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். இரு அணிகளும் மாறி மாறி நிர்வாகிகளை நீக்கியும், நியமித்தும் வருகின்றனர். அதுமட்டுமின்றி ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே மோதல் போக்கு நிலவி வருவதால் இரு அணியை சேர்ந்தவர்களும் மாறி மாறி விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓபிஎஸ் அணியினர் பொன்னையன் கட்சி நிர்வாகி ஒருவரிடம் பேசும் ஆடியோ ஒன்றை வெளியிட்டனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, பொன்னையனின் பதவியை எடப்பாடி பழனிசாமி பறித்தார். இதைத் தொடர்ந்து இரு அணியை சேர்ந்தவர்களும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசும்போது, கட்சி தலைமை இடத்தை சூறையாடிய ஓபிஎஸ் வீட்டை நாங்கள் சூறையாடுவதற்கு எவ்வளவு நேரம் ஆகும் என பேசி இருந்தார்.
இதையும் படிங்க: அதிமுக உட்கட்சி விவகாரங்களில் மூன்றாம் நபர் தலையிடுவதா..? யாரையும் அனுமதிக்க மாட்டோம்.. சீறிய ஜெயக்குமார்
இது ஓபிஎஸ் அணியினர் இடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. கலவரத்தை தூண்டும் வகையில் ஆர்.பி.உதயகுமார் பேசுகிறார் என பலரும் குற்றம் சாட்டினர். இந்நிலையில் நாக்கை அடக்கி பேசாவிட்டால் அடுத்த ஆடியோ வெளியிடப்படும் என ஓபிஎஸ் அணியின் தீவிர ஆதரவாளரும், தற்போது மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி ஆர்.பி.உதயகுமாருக்கு மிரட்டல் விடுத்துள்ளார். இதுக்குறித்து பேசிய அவர், ஆர்.பி.உதயகுமார் காலங்காலமாக அதிமுகவில் இருந்த நிர்வாகி இல்லை. ஒரு விபத்தில் அதிமுகவிற்கு வந்து, அதன்பிறகு அம்மாவையும், சசிகலாவையும் ஏமாற்றி டாக்டர் வெங்கடேஷ் மூலமாக பதவியை பெற்று அமைச்சராக ஆனவர். தற்போது ஓபிஎஸ் பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் கிடையாது. ஆர்.பி.உதயகுமார் செய்த ஊழல் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். அவை நிரூபிக்கப்பட்டால் காலம் முழுவதும் அவர் சிறையில் தான் இருப்பார்.
இதையும் படிங்க: உப்புமா, வெண் பொங்கல், கிச்சடி, அரசு பள்ளி மாணவர்களுக்கு வகை வகையான காலைச் சிற்றுண்டி.. இதோ மெனு..
முதலில் இரட்டை தலைமைதான் வேண்டும் என துதி பாடியவர், அதன் பிறகு ஒற்றைத் தலைமைதான் வேண்டும் என துதி பாட ஆரம்பித்தார். இவ்வாறு ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொருவரையும் பிடித்து மாறிமாறி பேசிக்கொண்டு வருகிறார். உதயகுமாருக்கு இருப்பது வாயா அல்லது கூவமா என தெரியவில்லை அம்மாவுக்கு கோயில் கட்டுகிறேன் என்று கூறி உதயகுமார் வீட்டில் இறப்பவர்களை அங்கு கொண்டு வந்து புதைத்து அதனை சமாதியாக மாற்றி வருகிறார். தற்போது ஓபிஎஸ்சின் மகனை ராஜினாமா செய்ய கூறும் உதயகுமார் திருமங்கலம் தொகுதியில் அவர் ராஜினாமா செய்து விட்டு மீண்டும் அங்கு நிற்க தயாரா என்றும் அவ்வாறு அங்கு நின்று அவர் ஜெயித்து விட்டால் நான் அரசியலில் இருந்து வெளியேறி விடுகிறேன் எனவும் தெரிவித்தார். மேலும், பொன்னையன் அது தனது ஆடியோ இல்லை என்று சொன்னால் மீண்டும் ஒரு ஆடியோ வெளியிடுகிறேன். இன்று நாள் சரியில்லை, நல்ல நாளாக பார்த்து மேலும் சில ஆடியோக்களை வெளியிடுகிறேன் என்று தெரிவித்தார்.