வடக்கையும் கலக்கியவர் இந்த கருணாநிதி… மாநிலங்களுக்கு சுயாட்சியைப் பெற்றுத் தந்தவரும் இவரே!!!

First Published Aug 9, 2018, 8:14 AM IST
Highlights

தமிழகத்தில் இருந்து கொண்டே வடக்கையும் வணங்க வைத்த கருணாநிதி ஐக்கிய முற்போக்கு கூட்டணியை வடிவமைத்தவர்களுள் முக்கியமானவர். 

மறைந்த முதலமைச்சர் கருணாநிதி தமிழகத்தில் மட்டுமல்ல அகில இந்திய அளவில் பல பிரச்சனைகளை சமாளிப்பதில் முக்கிய பங்காற்றியுள்ளார்.

1988 செப்டம்பர் 17 ல் கருணாநிதி முன்னின்று உருவாக்கிய தேசிய முன்னணி அகில இந்திய அரசியலில் ஒரு முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் – பாஜகவுக்கு  மாற்றான ஒரு முக்கிய முயற்சியாக இன்றளவும் அது பார்க்கப்படுகிறது. அதில், கருணாநிதி வெற்றியும் கண்டார் என்பது வரலாறு.

1996ல் மீண்டும் ஐக்கிய முன்னணியை கருணாநிதி முன்னின்று உருவாக்கினார். இக்கூட்டணி ஆட்சியில் அமர்ந்த பிறகு தேவகௌடா, ஐ.கே.குஜ்ரால் என இரு பிரதமர்களைத் தேர்ந்தெடுப்பதில் முக்கிய பங்காற்றினார் கருணாநிதி..

1996 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் – பாஜக  ஆகிய இரண்டு தேசிய கட்சிகளுக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில் இந்தி தெரியாத, ஆங்கிலம் தெரியாத தேவ கௌடாவை பிரதமராக்கினார் கருணாநிதி.

தென் இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் பிரதமராக வேண்டும் என்ற தென் இந்தியர்களின் கனவு கருணாநிதியால் நனவானது.

1996 ஆம் ஆண்டு பிரதமராகும் வாய்ப்பு கருணாநிதிக்கு கிடைத்தது. தேசிய அரசியலில் ஏற்பட்ட குழப்பத்தால், பிரதமராகும் வாய்ப்பு கிடைத்தும், தன் உயரம் தனக்குத் தெரியும் என எனக் கூறி பிரதமர் கோரிக்கையை துணிந்து நிராகரித்தார்

இதே போன்று கருணாநிதிக்கு குடியரசுத்தலைவருக்கான வாய்ப்பு வந்த போதும் தனக்கு தமிழக அரசியலே போதும்  என முடிவெடுத்தார்.

ஜூன் 25, 1975ல் நெருக்கடி நிலை பிறப்பிக்கபட்ட அடுத்த 24 மணி நேரத்தில் திமுக செயற்குழு கூட்டப்பட்டது. அதிகாலை 4 மணிக்கு கருணாநிதி தயாரித்த கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தியாவிலேயே முதன் முதலாக கட்சி ரீதியாக நெருக்கடி நிலைக்கு எதிராக கண்டனத் தீர்மானம் நிறைவேற்றியது கருணாநிதி தான்.

இதே போன்று சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகிய நாட்களில் கோட்டையில் ஆளுநர் மட்டுமே தேசிய கொடியை  ஏற்றி வந்தார். அப்போது ஆளுநரின் அதிகாரம் குடியரசு தினத்துடன் நிற்கட்டும் எனப் போராடி, சுதந்திர தினத்தன்று முதலமைச்சரே தேசிய கொடியை ஏற்றும் உரிமையைப் போராடி பெற்றுத் தந்தவரும் கருணாநிதியே.

கருணாநிதியின் இந்த ஆளுமைத்திறன், போராட்ட குணம் என பல பரிணாமங்களை வட மாநிலங்கள் மட்டுமல்லாமல், அனைத்து ஆங்கில பத்திரிக்கைளும் பாராட்டுகின்றன.

click me!