திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலையில் சிறிய பின்னடைவு ஏற்பட்டது உண்மையே என சென்னை காவேரி மருத்துவமனையில் திருநாவுக்கரசர் தகவல் தெரிவித்துள்ளார். அவரின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள், குடும்ப உறுப்பினர்களிடம் கேட்டறிந்தேன். கருணாநிதிக்கு மருத்துவக் குழுவினர் தீவிரமாக சிகிச்சை அளித்து வருகின்றனர். கருணாநிதியின் உடல் நலம் தேற இறைவனை பிரார்த்திக்கிறேன் என காவேரி மருத்துவமனையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் பேட்டியளித்துள்ளார். முன்னதாக கடந்த ஜூலை 28-ம் தேதி நள்ளிரவு கோபாலபுரம் இல்லத்தில் இருந்து ரத்த அழுத்தக் குறைவு காரணமாக காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் கருணாநிதி அனுமதிக்கப்பட்டார். பிறகு கருணாநிதிக்குத் தொடர் சிகிச்சை அளித்ததன் மூலம் அவரது ரத்த அழுத்தம் சீரான நிலைக்கு வந்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. மீண்டும் ரத்த அழுத்தம் இயல்புக்கு வந்தாலும், வயது முதிர்வுக்கு உள்ள பிரச்சனையால் இருக்கும் கருணாநிதி இன்னும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்று மருத்துர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் கடந்த 10 நாட்களாக காவிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதிக்கு திடீரென காலை உடல் நிலை பாதிக்கபட்டது உண்மையே என திருநாவுக்கரசர் கூறியுள்ளார். இதனால் மருத்துவமனை சுற்றிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.