
கர்நாடக மாநிலம் ஜெய்நகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி 4 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 10 ஆண்டுகளாக பாஜகவிடம் இருந்த இந்தத் தொகுதி தற்போது காங்கிரஸ் கைவசம் சென்றது.
கர்நாடக சட்டசபைக்கு கடந்த மே மாதம் 12-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. பெங்களூரு ஜெயநகர் தொகுதியில் பாஜக சார்பில் வேட்பாளராக போட்டியிட்ட விஜயகுமார் தீவிர பிரச்சாரத்தில் இருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். இதையடுத்து ஜெயநகர் தொகுதியில் மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
அப்போது நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ், மஜத கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்துள்ளன. குமாராசாமி முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளார். மேலும் 25 அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்.
இந்த நிலையில் ஜூன் 11-ந் தேதி(நேற்று முன்தினம்) ஜெயநகர் தொகுதியில் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதில் பா.ஜனதா சார்பில் மரணம் அடைந்த விஜயகுமாரின் சகோதரர் பிரகலாத் நிறுத்தப்பட்டிருந்தார்.
காங்கிரஸ் சார்பில் முன்னாள் அமைச்சர் ராமலிங்கரெட்டியின் மகள் சவுமியா ரெட்டி போட்டியிட்டார். . இந்த தேர்தலில் ஜனதா தளம்(எஸ்) கட்சி போட்டியில் இருந்து விலகிக் கொண்டது. அக்கட்சி காங்கிரசுக்கு ஆதரவு அளித்தது.
அதன்படி நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. இதில் 55 சதவீத ஓட்டுகள் பதிவாயின. பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் ஜெயநகரில் உள்ள எஸ்.எஸ்.எம்.ஆர்.வி. கல்லூரியில் வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் ஜெயநகர் தொகுதியில் பதிவான வாக்குள் இன்று எண்ணப்பட்டன.
இதில் துவக்கத்தில் இருந்தே காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்தது. காங்கிரஸ் கட்சி 54,045 வாக்குகள் பெற்று இருந்தது. பா.ஜனதா 50,270 வாக்குகள் பெற்று இருந்தது. இதன்படி, 4 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக தோல்வியை தழுவியது. காங்கிரஸ் கட்சி 46 சதவீத வாக்குகளையும் பாரதீய ஜனதா 33.2 சதவீத வாக்குகளையும் பெற்று உள்ளது. இந்த தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளதன் மூலம் அக்கட்சியின் பலம், 79 ஆக அதிகரித்துள்ளது.
ஜெய்நகர் தொகுதி கடந்த 10 ஆண்டுகளாக பாஜக வசம் இருந்தது வந்தது. இந்நிலையில் இதனை பாஜக கோட்டைவிட்டுள்ளது.