கட்டம் கட்டப்பட்ட கனிமொழி.. அவர் ஆரம்பித்த சென்னை சங்கமத்தில் பெயர் மிஸ்ஸிங்..?? அதிர்ச்சியில் ஆதரவாளர்கள்.

By Ezhilarasan BabuFirst Published Nov 27, 2021, 12:50 PM IST
Highlights

இன்னும் சிலர், கலைஞரின் மறைவுக்குப் பின்னர் கனிமொழி அரசியல் இருந்து ஓரம் கட்டுவதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக தகவல்கள் அங்கொன்றும், இங்கொன்றும் வெளியானது. ஏற்கனவே அழகிரி ஓரங்கட்டப்பட்டுவிட்ட நிலையில் அடுத்து கனிமொழிக்குதான் கட்டம் கட்ட முயற்சிகள் நடந்து வருவதாக தெரிகிறது. தமிழக அரசியலில் அவர் கால்பதித்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தவர்கள் அவரை அப்போதே டெல்லிக்கு அனுப்பி வைத்து விட்டனர். 

அழகிரியைப் போலவே கனிமொழியையும் அரசியலிலிருந்து ஓரம் கட்ட முயற்சிகள் நடந்து வருவதாக அதிரிபுதிரியாக பேச்சுக்கள் அடிபட்டு வரும் நிலையில்  தமிழக அரசு அறிவிக்கப் போகும் சென்னை சங்கமம் குழுவில் இருந்தும் கனிமொழி ஒதுக்கப்படுவதாக அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சி கைப்பற்றியுள்ள திமுக பல்வேறு அதிரடி திட்டங்களை அறிவித்து வருகிறது. கடுமையான நிதி நெருக்கடியில் இருந்தாலும்கூட அது அனைத்தையும் சமாளித்து, மக்களுக்கு தேவையான நலத்திட்டங்களை முன்னெடுப்பதில் கவனம் செலுத்திவருகிறது ஸ்டாலின் அரசு. தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை, மழை வெள்ளத்தை துரிதமாக செயல்படவில்லை என்பது போன்ற குற்றச்சாட்டுகளை அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் அடுக்குகின்றன. 

இதேபோல் கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தைகள், தமிழர் வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை, முதல்வர் ஸ்டாலின் கட்டுப்பாட்டில் தமிழக காவல்துறை இல்லவே இல்லை என்ற விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். கூட்டணி கட்சிகள் ஒரு புறம் எதிர்க்கட்சிகள் மறுபுறம் என திமுகவையும், அதன் தலைமைகளை விமர்சித்து வரும் நிலையில், இப்போது கட்சிக்குள்ளாகவே ஸ்டாலினுக்கு எதிராக விமர்சனங்கள் எழத் தொடங்கியுள்ளது. கருணாநீதியால் அரசியலுக்கு அழைத்துவரப்பட்ட அவரின் அன்புமகள் கனிமொழியை கட்சித் தலைமை கட்டம் கட்டுகிறது என்பதுதான் அது.  கருணாநிதியின் அரசியல் வாரிசுகளான ஸ்டாலினும், கனிமொழியும் இருந்து வரும் நிலையில், மொத்தமாக கனிமொழியை ஓரம் கட்டுவதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக கனிமொழியின் ஆதரவாளர்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியின்போது ஏழை, எளிய நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வில் ஒளியேற்றும்  விதமாகவும் தமிழர்களின் பண்பாடு கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் சென்னைசங்கமம் என்ற கிராமியக்கலை திருவிழா நடத்தப்பட்டது. 

தமிழ் மையமும், தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சி, பண்பாட்டுத் துறையும் இணைந்து இதை முன்னெடுத்தன. இது அப்போது பலராலும் பாராட்டப்பட்டது. இந்த திட்டம் முழுக்க முழுக்க திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்களின் எண்ணத்தில் உதித்தவையாகும். தற்போது மீண்டும் திமுக  ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி மீண்டும் சென்னை சங்கமம் விழா நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்தது. பின்னர் இது தொடர்பாக தமிழக முதலமைச்சரிடமும் எடுத்துரைத்து சாதகமான பதிலை பெற்றுத்தருவதாக ஏற்கனவே நாட்டுப்புற கலைஞர்களுக்கு கனிமொழி உறுதியளித்திருந்தார். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பொங்கல் பண்டிகையை ஒட்டி சென்னை சங்கமம் விழா நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வது குறித்து அமைச்சர்கள் மட்டத்திலான மேல் மட்ட பேச்சுவார்த்தை நடந்ததாக திமுக வட்டாரங்களில் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அது தொடர்பான ஆலோசனையில் அதற்கு காரண கர்த்தரான கனிமொழி இடம்பெறவில்லை. இது அவரின் ஆதரவாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியது.

இதுகுறித்து பேசிய, திமுகவின் முக்கிய மகளிரணி பிரமுகர் கனிமொழிக்கு எதிராக நடக்கும் உள்குத்து அரசியலையும், கனிமொழியை ஒரங்கட்ட சதி நடப்பதாகவும் தன் மனக்குமுறலை கொட்டி தீர்த்துள்ளார். அதில், சமீபத்தில் தமிழக அரசு அறிவித்த இலங்கைத் தமிழர் நலவாரிய குழுவில் கனிமொழி இடம் பெறாது பெரும் வருத்தத்தை அளிக்கிறது, மீண்டும் சென்னை சங்கமம் பிரம்மாண்டமாக நடத்தப்படும் என்று கட்சி தலைமையில் தகவல் வெளியாகி வருகிறது.  அதற்காக அமைக்கப்படவுள்ள குழுவிலும் கனிமொழியின் பெயர் இடம் பெறவில்லை எனக் கூறப்படுகிறது. தமிழ் மீதும் தமிழ் பண்பாட்டின் மீதும் அவர் வைத்திருந்த காதலின் வெளிப்பாடுதான் சென்னை சங்கமம், அவரையே சென்னை சங்கமத்தில் இருந்து இதுக்குவது தாயையும் பிள்ளையையும் பிரிப்பதற்கு சமம். கனிமொழி கலைஞரின் மகள் என்ற அடையாளத்தையும் தாண்டி சிறந்த கவிஞர், கொள்கையில் உறுதி மிக்கவர், கட்சியினர், பொதுமக்களிடம் பணிவுடன் அணுகும் பாங்கு கொண்டவர். இதுதான் அவருடைய மக்கள் செல்வாக்கு காரணம், இக்கட்டான நேரங்களில் திமுகவுக்கு உறுதுணையாக இருந்தவர். அவர் மேற்கொண்ட பிரச்சாரங்கள், போராட்டங்கள், மக்களுக்காக நடத்திய ஆர்ப்பாட்டங்கள் போன்றவையே இன்று தென்மாவட்டங்களில் திமுக வலுவாக இருப்பதற்கு காரணம் என ஆதங்கத்தை வெளிபடுத்தியுள்ளார்.

இன்னும் சிலர், கலைஞரின் மறைவுக்குப் பின்னர் கனிமொழி அரசியல் இருந்து ஓரம் கட்டுவதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக தகவல்கள் அங்கொன்றும், இங்கொன்றும் வெளியானது. ஏற்கனவே அழகிரி ஓரங்கட்டப்பட்டுவிட்ட நிலையில் அடுத்து கனிமொழிக்குதான் கட்டம் கட்ட முயற்சிகள் நடந்து வருவதாக தெரிகிறது. தமிழக அரசியலில் அவர் கால்பதித்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தவர்கள் அவரை அப்போதே டெல்லிக்கு அனுப்பி வைத்து விட்டனர்.  2ஜி விவகாரத்துக்கு பின்னர் அதையே காரணம் காட்டி அவருக்கான அங்கீகாரங்கள் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. ஸ்டாலினுக்கு அடுத்தப்படியாக உதயநிதி ஸ்டாலினை முன்னிலைபடுத்துவதற்கான முயற்சிகளில் குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். எனவே கனிமொழி சென்னைக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காக அவருக்கு  தூத்துக்குடி ஒதுக்கப்பட்டது. இப்போதும் அவர் சென்னைக்குள் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே சென்னை சங்கமத்திலிருந்து ஓரங்கட்ட முயற்சிகள் நடக்கிறது. திமுகவின் தெற்கு முகமாக கனிமொழி பார்க்க படுவார் என கூறப்பட்டது, ஆனால் அதற்கு எந்த அறிகுறிகளும் தென்படவில்லை. கனிமொழி ஒன்று வடக்கே டெல்லியில் இருக்க வேண்டும், இல்லையென்றால் தெற்கே தூத்துக்குடியில் இருக்க வேண்டும். அவர் ஒருபோதும் சென்னையில் சங்கமித்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றனர் என அவரது ஆதரவாளர்கள் ஆதங்க குரல் எழுப்பியுள்ளனர்.  
 

click me!