கனிமொழிக்கு மோடி கொடுத்த புதிய பதவி ! ஏமாற்றத்தில் திமுக !

By Selvanayagam PFirst Published Sep 14, 2019, 9:40 PM IST
Highlights

தமிழகத்தைச் சேர்ந்த திமுக எம்.பி. கனிமொழி வேதியியல், உரத்துறை நிலைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த பல எம்.பி.க்கள் பல குழுக்களில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பொதுவாகவே நாடாளுமன்ற நிலைக்குழுத் தலைவர்களாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள்தான் அதிகமாக நியமிக்கப்படுவார்கள். குறிப்பாக வெளியுறவுத்துறை நிலைக்குழு, நிதித்துறை நிலைக்குழு ஆகியவற்றுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களே தலைவராக இருப்பார்கள்.  

ஆனால் இந்த மரபுகளை உடைத்து பெரும்பாலான நிலைக்குழுத் தலைவர்களாக பாஜக எம்.பி.க்களே இம்முறை நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். மாநிலங்களவையின்  மூத்த காங்கிரஸ் உறுப்பினர் ஆனந்த சர்மா உள்துறை நிலைக்குழுத் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி முன்பு வெளியுறவுத் துறை நிலைக்குழு உறுப்பினராக இருந்தார். இப்போது பாதுகாப்புத்துறை நிலைக்குழு உறுப்பினராக ஆக்கப்பட்டிருக்கிறார்.

தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த மாதம் ஆகஸ்டு 29 ஆம் தேதி அறிவாலயத்தில் கடந்த திமுக எம்.பி.க்கள் கூட்டத்திலேயே நாடாளுமன்ற கமிட்டி தொடர்பான ஆலோசனை நடந்தது. நாடாளுமன்றத்தில் திமுக மூன்றாவது பெரிய கட்சி என்பதால் அக்கட்சிக்கு கணிசமான நிலைக்குழுத் தலைவர்கள் பதவியும், உறுப்பினர்கள் பதவியும் வழங்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அக்கட்சி எம்.பி.க்களிடையே இருந்தது.

இந்நிலையில் அரசின் பரிந்துரையின்  அடிப்படையில்  மக்களவை, மாநிலங்களவை தலைவர்களால் நியமிக்கப்படும் நிலைக்குழுக்களின் தமிழகத்தின் சார்பில் கனிமொழி மட்டுமே நிலைக்குழுத் தலைவராகியிருக்கிறார். கனிமொழிக்கு தலைவர் பதவி கிடைக்க, டி.ஆர்.பாலு, ராசா உள்ளிட்டோர் நிலைக்குழு உறுப்பினர்களாகியிருக்கிறார்கள்.


கனிமொழி தலைமையிலான வேதியியல், உரத்துறை நிலைக் குழுவில் வசந்தகுமார், விஷ்ணு பிரசாத் ஆகிய தமிழக காங்கிரஸ் எம்.பிக்கள் இடம்பெற்றுள்ளனர். பணியாளர் குறை தீர்ப்பு, சட்டம்- நீதித்துறைக்கான நிலைக்குழுவில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா இடம்பெற்றுள்ளார்.

ரயில்வே நிலைக்குழுவில் ஏற்கனவே தலைவராக இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு அதே நிலைக்குழுவில் உறுப்பினராகியிருக்கிறார். வேளாண்துறைக்கான நாடாளுமன்றக் குழுவில் ம.தி.மு.க பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ, ம.தி.மு.க எம்.பி., கணேசமூர்த்தி, அ.தி.மு.க எம்.பி., வைத்திலிங்கம் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைக்கான குழுவில் பா.ம.க அன்புமணி, புதுச்சேரி காங்கிரஸ் எம்.பி., வைத்தியலிங்கம் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் நெய்வேலி அனல் மின் நிலையத்தில் செல்வாக்கு செலுத்தக் கூடிய நிலக்கரி, எஃகு உற்பத்தி நிலைக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பாதுகாப்புத் துறைக்கான நிலைக்குழு உறுப்பினராக தி.மு.க எம்.பி., கலாநிதி வீராசாமி நியமிக்கப்பட்டுள்ளார். வர்த்தகத் துறைக்கான நிலைக்குழு உறுப்பினராக தி.மு.க எம்.பி., கதிர் ஆனந்த், சண்முக சுந்தரம் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.ஊரக வளர்ச்சித்துறை நிலைக் குழு உறுப்பினராக நாமக்கல் எம்.பி. சின்ராஜ் ஆகியிருக்கிறார்.

ஆனால் நிலைக்குழு உறுப்பினர் பதவிகளை விட, தலைவர் பதவிகள்தான் நாடாளுமன்ற ஜனநாயகத்தில் முக்கியத்துவம் பெறும். அந்த வகையில் திமுகவுக்கு ஒரே ஒரு நிலைக்குழு தலைவர் பதவி என்பது அக்கட்சியினர் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

click me!