
அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடைபெற்ற சிபிஐ சோதனையில் கிடைத்த தகவல்களை வருமான வரித்துறை அதிகாரிகள் காவல் துறைக்கு அனுப்ப தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
அமைச்சர் விஜயபாஸ்கர், வீட்டில் நடைபெற்ற சிபிஐ சோதனைகள் குறித்து திமுக சார்பில் அக்கட்சியின் எம்.பி. கனிமொழி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி , திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அளித்த கடிதத்தை தேர்தல் ஆணைய அலுவலகத்தில் அளித்ததாக கூறினார்.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலின்போது நடைபெற்ற முறைகேடுகள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனுவில் கூறியிருப்பதாக அவர் தெரிவித்தார்.
அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடைபெற்ற சோதனையில், முதலமைச்சர் உள்பட முக்கிய அமைச்சர்களின் பெயர்கள் அடங்கிய விவரம் வருமான வரித்துறையினருக்குக் கிடைத்துள்ளது. ஆனால், அந்த விவரங்கள் காவல் துறைக்கு வழங்கப்படவில்லை என்றார்.
எனவே காவல் துறையினர் அவர்களின் முதல் தகவல் அறிக்கையில் அடையாளம் தெரியாத நபர் என்று குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.