மறைந்த எழுத்தாளர் பாலகுமாரன், சினிமாவுக்கு வரும் முன்பே தனக்கு தெரியும் என்றும், பாலகுமாரன் ஒரு நல்ல வாழ்க்கை வாழ்ந்துவிட்டு சென்றுள்ளார் என்றும் மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவர் கமல் கூறியுள்ளார்.
பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் (71) உடல்நலக்குறைவால் அண்மையில் காலமானார். திரைத்துறையில் இயக்குநர் பாலசந்தருடன் 3 படங்களிலும், பாக்கியராஜின் இது நம்ம ஆளு படத்தையும் பாலகுமாரன் இயக்கியுள்ளார். நாயகன், குணா, பாட்ஷா உள்ளிட்ட 23 படங்களுக்கு அவர் திரைக்கதை வசனம் எழுதியுள்ளார்.
அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் அஞ்சலி தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன், இன்று சென்னை மயிலாப்பூரில் உள்ள பாலகுமாரன் வீட்டுக்கு சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
எழுத்தாளர் பாலகுமாரன், சினிமாவுக்கு வர வேண்டும் என்று வற்புறுத்தியது நான்தான் என்றும் கமல் தெரிவித்தார். பாலகுமாரன் அற்புதமான எழுத்தாளர். நாங்கள் இருவரும் சேர்ந்து ஒரு கதை எழுதியதாகவும் கூறினார்.