அவர் நல்ல வாழ்க்கையை வாழ்ந்து சென்றுள்ளார்...! பாலகுமாரனுக்கு புகழாரம் சூட்டிய கமல்...!

First Published May 21, 2018, 2:20 PM IST
Highlights
Kamal to praise Balakumaran


மறைந்த எழுத்தாளர் பாலகுமாரன், சினிமாவுக்கு வரும் முன்பே தனக்கு தெரியும் என்றும், பாலகுமாரன் ஒரு நல்ல வாழ்க்கை வாழ்ந்துவிட்டு சென்றுள்ளார் என்றும் மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவர் கமல் கூறியுள்ளார்.

பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் (71) உடல்நலக்குறைவால் அண்மையில் காலமானார். திரைத்துறையில் இயக்குநர் பாலசந்தருடன் 3 படங்களிலும், பாக்கியராஜின் இது நம்ம ஆளு படத்தையும் பாலகுமாரன் இயக்கியுள்ளார்.  நாயகன், குணா, பாட்ஷா உள்ளிட்ட 23 படங்களுக்கு அவர் திரைக்கதை வசனம் எழுதியுள்ளார்.

பாட்ஷா படத்தில் இடம் பெறும், நான் ஒரு முறை சொன்னா 100 முறை சொன்ன மாதிரி... என்ற அவரது வசனம் மிக பிரபலமானது. 200-க்கும் மேற்பட்ட நாவல்கள், சிறுகதைகள் எழுதியுள்ள அவர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்தார்.

அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் அஞ்சலி தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன், இன்று சென்னை மயிலாப்பூரில் உள்ள பாலகுமாரன் வீட்டுக்கு சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

இதன் பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த கமல் ஹாசன், மறைந்த எழுத்தாளர் பாலகுமாரன், சினிமாவுக்கு வருவதற்கு முன்பாகவே எனக்கு தெரியும் என்று கூறினார்.

எழுத்தாளர் பாலகுமாரன், சினிமாவுக்கு வர வேண்டும் என்று வற்புறுத்தியது நான்தான் என்றும் கமல் தெரிவித்தார். பாலகுமாரன் அற்புதமான எழுத்தாளர். நாங்கள் இருவரும் சேர்ந்து ஒரு கதை எழுதியதாகவும் கூறினார்.

மறைந்த எழுத்தாளர் பாலகுமாரன் ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு சென்றுள்ளார். தமிழுக்கு பாலகுமாரன் அளித்துச் சென்ற பரிசுகளுக்கு நன்றி என்றும் கமல் நெகிழ்ச்சியுடன் அப்போது கூறினார்.

click me!