
சினிமாவில் இருதுருவங்களாக திகழ்ந்த ரஜினியும் கமலும் அரசியலிலும் ஒரே நேரத்தில் களமிறங்குகின்றனர். ஆனால் ரஜினிக்கு முன்னதாக கட்சியின் பெயரை அறிவித்து தீவிர அரசியலை தொடங்குகிறார் கமல்.
நாளை அரசியல் கட்சியின் பெயரை அறிவித்து ராமேஸ்வரத்தில் இருந்து அரசியல் பயணத்தை தொடங்குகிறார் கமல். அதற்காக முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு, ரஜினிகாந்த், திமுக தலைவர் கருணாநிதி ஆகியோரை சந்தித்து கமல் வாழ்த்து பெற்றார்.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கமலின் இல்லத்தில் சென்று அவரை சந்தித்தார்.
சுமார் 15 நிமிட சந்திப்புக்குப் பிறகு இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய சீமான், சிறு வயதிலிருந்து கமலின் ரசிகராக இருந்து வளர்ந்தவன் நான். ஏதாவது மாற்றம் நிகழ்ந்துவிடாதா என மக்கள் காத்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் மண்ணின் மைந்தனான கமலும் அரசியலுக்கு வருகிறார். அதற்காக ஒவ்வொரு தலைவராக சந்தித்து வாழ்த்தை பெற்றுவருகிறார். என்னை சந்திப்பதற்கு நேரம் கேட்டார். கமலை பார்த்து ரசித்து வளர்ந்தவன் நான். அவர் என்னை வந்து பார்ப்பது சரியாக இருக்காது. நான் வந்து பார்ப்பது தான் சரி என்பதால் நானே வந்து சந்தித்தேன். கமலின் அரசியல் பயணம் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள். புரட்சிகர மற்றும் வெற்றிகரமான அரசியலாக இருக்க வாழ்த்துக்கள் என சீமான் தெரிவித்தார்.
இதையடுத்து கமலுடன் அரசியல் கூட்டணி வைக்க வாய்ப்பிருக்கிறதா என சீமானிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அருகிலிருந்து கமல், இந்த கேள்விக்கு நான் பதில் சொல்லலாமா? என சீமானிடம் கேட்டார். நீங்கள் என்னிடம் அனுமதி கேட்கலாமா? என்பது போல் வெட்கப்பட்ட சீமான் சரி என்றார்.
அதற்கு பதிலளித்த கமல், சீமான் சினிமாவில் என்னை ரசித்துள்ளார். தனிப்பட்ட முறையில் என்னை அவருக்கு தெரியும். ஆனால் அரசியல் ரீதியாக என்னுடைய கொள்கை என்ன என்பதை அறிந்த பின்னர் முடிவு எடுப்பதுதான் சரியாக இருக்கும். அந்த வகையில் நாளை என்னுடைய அரசியல் பயணத்தையும் அதன்பின்னர் அரசியலில் என்னுடைய செயல்பாட்டையும் பார்த்த பின்னர் முடிவெடுப்பதுதான் சரியாக இருக்கும் என கமல் பதிலளித்தார்.