தேவையென்றால் மக்களின் செருப்பாக கூட இருப்பேன் என கர்நாடக முதல்வரை சந்தித்த கமல்ஹாசன் உருக்கமாக தெரிவித்தார்.
காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்வர் குமாரசாமியை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து பேசினார். பெங்களூருவில் உள்ள குமாரசாமியின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது பேசிய கமல், காலா திரைப்படம் வெளியீடு குறித்து எதுவும் பேசவில்லை. திரைப்படங்களை விட தண்ணீர் தான் முக்கியம். காவிரி விவகாரத்தில் இரு மாநிலங்களும் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் என கருத்து தெரிவித்தார்.
அப்போது இரு மாநில அரசுகளுக்கு இடையே பாலமாக செயல்படுவதற்காக இந்த சந்திப்பா? என்ற கேள்விக்கு பதிலளித்த கமல், தமிழக மக்கள் சார்பாக இங்கு வந்துள்ள நானும் கர்நாடக மக்களின் சார்பாக குமாரசாமியும் சந்தித்து பேசியுள்ளோம் என்றார். மேலும் தமிழக மக்களுக்காக நான் எதுவாக வேண்டுமானால் இருப்பேன். அணிலாகவோ, பாலமாகவோ அல்லது தேவைப்பட்டால் மக்கள் போட்டு நடக்கும் செருப்பாக கூட இருப்பேன் என கமல் தெரிவித்தார். புதிதாக அரசியல் கட்சி தொடங்கியுள்ள நான், அரசியலில் சிறு குழந்தை. எனக்கு ஈகோவெல்லாம் கிடையாது என கமல் கூறினார்.