தமிழகத்தில் தற்போது மக்கள் நல்ல நிர்வாகிகளைத் தேட வேண்டுமே தவிர, நல்ல தலைவர்களை அல்ல என கமலஹாசன் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், தான் புதிதாக அரசியல் பேசவில்ல என்றும், எதையும் மனதில் வைத்துக் கொண்டு குறை கூறவில்லை என்றும் தெரிவித்தார்.
மனதில் பட்டதை மக்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நாடு நல்ல வழியில் செல்ல வேண்டும் என்பதில் பொது மக்களில் ஒருவன் என்ற முறையில் எனக்கும் அக்கறை உண்டு என அவர் கூறினார்.
கருத்து சொல்ல எல்லோருக்கும் உரிமை உண்டு என்றும், அது பற்றி யார் விமர்சித்தாலும் கவலை இல்லை என்றும் தெரிவித்த கமல், . ரஜினி கட்சி தொடங்கினாலும் தவறு இருந்தால் சுட்டிக் காட்டுவேன் என அதிரடியாக குறிப்பிட்டார்.
நமது மக்கள் நல்ல தலைவரை தேடவில்லை நல்ல நிர்வாகிகளைத்தான் என்றும் கமல் கூறினார்.
பொதுப் பணி துறை என்றால் பொறுப்பான என்ஜினீயரிங் படித்தவர் அதற்கு தலைமை ஏற்க வேண்டும், சுகாதார துறை என்றால் சிறந்த மருத்துவர் தான் அந்த துறைக்கு பொறுப்பு உடையவராக இருக்க வேண்டும் என்றும் கமலஹாசன் கூறினார்.
நான் ஒரு நடிப்பு பயிற்சி கல்லூரி தொடங்கினால் அது சிறப்பாக இருக்கும் காரணம் என்ன வென்றால் எனக்கு நடிப்பு பற்றி தெரியும். இது போல் ஒவ்வொரு துறையிலும் நிபுணத்துவம் உள்ளவர்கள் அமைச்சராக இருந்தால் நாட்டுக்கு நல்லது கிடைக்கும் என கமலஹாசன் கூறினார்.
ஜெயலலிதா உயிருடன் இருந்த போதே தனிப்பட்ட முறையில் தான் குறி வைக்கப்பட்டதாகவும், ஆனால் அது ஏன் என்று இதுவரை தெரியவில்லை என்றும் கமலஹாசன் தெரிவித்தார்.