ரூ.600 மாத வருமானம்... மனநல காப்பகத்தில் மகன்... வறுமையின் கோரப்பிடியில் கக்கன் மகன்கள்..!

By Thiraviaraj RMFirst Published May 12, 2019, 3:50 PM IST
Highlights

முன்னாள் அமைச்சராக எளிமையின் எடுத்துக் காட்டாக வாழ்ந்த கக்கனின் பிள்ளைகள் இவ்வளவு கஷ்டத்தில் இருப்பது மனதை ரணமாக்குகிறது.  

மதுரை மேலூர் அருகே உள்ள தும்பைப்பட்டிதான் கக்கனின் பூர்வீகம். அவருக்கு ஒரு மகள் 5 மகன்கள். அவர்களில் 2 மகன்கள் இப்போது உயிரோடு இல்லை. 

அரசு வீட்டில் குடியிருந்தவர் ஓய்வு பெற்ற டாக்டர் சத்தியநாதன். இவருக்கு அரசு டாக்டர்களுக்கான பென்ஷன் வருகிறது. அதில் தான் குடும்பத்தை ஓட்டி வருகிறார். இன்னொரு மகன் 73 வயதான பாக்கியநாதன். பரிதாபத்தில் இருக்கிறார் பாக்கியநாதன். சொந்த வீடு கிடையாது. கக்கனின் தம்பி விசுவநாதன் மகள் இமயா கக்கன் சென்னை காட்டுப்பாக்கத்தில் வசிக்கிறார். அவர் வீட்டு மாடியில்தான் பாக்கியநாதன் தங்கி இ வசித்து வருகிறார். 

இதுகுறித்து இமயா கக்கன் கூறும்போது, ’’எனது பெரியப்பா கக்கன் மகன்களில் பாக்கியநாதன் சிம்சனில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பென்‌ஷன் எல்லாம் எதுவும் கிடையாது. அவரது மனைவி சரோஜினி தேவி. இருவருக்குமே 70 வயதுக்கும் மேல். இவர்களது ஒரு மகன் சி.ஆர்.பி.எப்.பில் போலீஸ்காரராக வேலை பார்க்கிறார். இன்னொரு மகனுக்கு வேலை இல்லை.

மிகவும் கஷ்டப்பட்டதால் அவர்களை எனது வீட்டு மாடியில் தங்க வைத்து பார்த்து கொள்ளும்படி என் அப்பா கேட்டுக் கொண்டார். ஆகையால் கடந்த 17 ஆண்டுகளாக இங்குதான் வசித்து வருகிறார்கள். எந்தவிதமான வருமானமும் இல்லாமல் அவதிப்பட்ட அவர்களின் நிலைமையை கேள்விப்பட்டு கருணாநிதி முதல்வராக இருந்த போது ரூ.1 லட்சம் வழங்கினார். அதில் இருந்து மாதம் ரூ.635 கிடைக்கிறது. இதுதான் அவர்களது வருமானம்.

சர்க்கரை நோய் காரணமாக ஒரு விரல் அகற்றப்பட்டுள்ளது. தேவையான மருந்து மாத்திரைகளை கூட தெரிந்தவர்கள் மூலம்தான் வாங்கி கொடுக்கிறேன். இவர்களுக்கும் மனிதாபிமான அடிப்படையில் அரசு உதவிகள் செய்தால் தங்கள் கடைசி காலத்தை சந்தோசமாக வாழ்வார்கள். கக்கனின் இளைய மகன் நடராஜ மூர்த்தி. அந்த காலத்தில் கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரியில் மருத்துவம் படித்தார்.  மெரிட் ஸ்டூடன்டாக இருந்த அவருக்கு திடீரென்று மனநிலை பாதித்தது. அதையும் குணமாக்க முடியவில்லை. கடந்த 35 ஆண்டுகளாக கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் தான் இருக்கிறார்’’ என்கிறார்.

முன்னாள் அமைச்சராக எளிமையின் எடுத்துக் காட்டாக வாழ்ந்த கக்கனின் பிள்ளைகள் இவ்வளவு கஷ்டத்தில் இருப்பது மனதை ரணமாக்குகிறது.  

click me!