மாநிலத்தில் சேவகம் செய்யும் ஆட்சி.. காவி கூட்டம் துள்ளி திரிகிறது.. பெரியார் சிலை அவமதிப்பால் கி.வீரமணி ஆவேசம்

By Asianet TamilFirst Published Jul 17, 2020, 7:57 PM IST
Highlights

காவிச் சாயத்தை தந்தை பெரியார் சிலைமீது ஊற்றுவதால் காவியை தமிழ்நாட்டில் காலூன்றச் செய்யலாம் என்ற கனவு காணவேண்டாம். காவிச் சாயத்தை ஊற்றுவதன்மூலம், ஊற்றிய காவிக் கும்பலின் சாயம்தான் வெளுக்கும். இத்தகு செயல்கள் தந்தை பெரியார் கொள்கை மீது, அவர் தம் சித்தாந்தம் மீது உண்மையான திராவிட இயக்கங்கள் மீது மேலும் மேலும் உறுதியை, ஓங்கி ஒலிக்கவே செய்யும். சமூக வலைதளங்களில் தந்தை பெரியார் மீதும், திராவிட இயக்கத் தலைவர்கள்மீதும் கீழ்த்தரமான ஒளி-ஒலிபரப்புகள் நடந்துகொண்டுள்ளன.
 

பாஜகவின் மிரட்டலுக்கோ, அதிகார அச்சுறுத்தலுக்கோ கைகட்டி சேவகம் செய்யும் ஓர் ஆட்சி மாநிலத்தில் இருப்பதால், காவிக் கூட்டம் துள்ளித் திரிகிறது என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தந்தை பெரியார் என்ற சகாப்தத் தலைவர் ஏற்படுத்திய விழிப்புணர்வு - இந்தியத் துணைக் கண்டத்திலேயே தமிழ்நாட்டைத் தனித்தன்மையுடன் ஒளிரச் செய்கிறது! இந்தியாவில் பல மாநிலங்களிலும் கால் பதித்துவரும் காவிக் கூட்டம், பா.ஜ.க. உள்ளிட்ட சங்பரிவார்கள் தமிழ்நாட்டு மக்களால் அடியோடு புறக்கணிக்கப்படுவதற்கு இந்த மனிதர்தானே காரணம் என்ற ஆத்திரம் வெறியாகி, தந்தை பெரியார் சிலையை அவமதிக்கும் சிறுமதி வேலையில் ஈடுபட்டு வருவது தொடர்கதையாகிவிட்டது.
தந்தை பெரியார் சிலை கூட மத வெறியர்களை மருண்டோடச் செய்கிறது; காரணம், தந்தை பெரியார் பதித்துச் சென்ற சித்தாந்தம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கானது, பெண்ணுரிமைக்கானது, சமூக நீதிக்கானது, பகுத்தறிவுக்கானது, பார்ப்பனரல்லாதரின் உரிமைக்கானது, தமிழ்நாட்டின் உரிமைக்கானது. இவை அனைத்திற்கும் விரோதமான ஆட்சி மத்தியில் நடக்கிறது. மத்தியில் அதிகாரத்தில் இருக்கும் பாஜகவின் கொள்கை, அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். கொள்கை. மாநில உரிமைகளை ஏற்காத ஒன்று - ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்ற இந்துத்துவக் கோட்பாட்டைத் தன் வேராகவும், உயிராகவும் கொண்டது.
இவற்றுக்கெல்லாம் நேர் எதிரான - பார்ப்பனீய நோயை ஆணிவேர் வரை சென்று வீழ்த்தும் சமத்துவ சமதர்ம, சுயமரியாதைத் தத்துவத்தை தமிழ் மண்ணில் ஒவ்வொரு கண்ணியிலும் விதைத்துச் சென்று இருக்கிறார் தந்தை பெரியார். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கட்சிகளுக்கு அப்பாற்பட்ட ஒட்டுமொத்த தமிழின மக்களின் உணர்வில், குருதியில் உறைந்து போன மண்ணின் மனப்பாங்கு (Soil Psychology) இது என்பது உறுதிப்படுத்தப்பட்ட ஒன்று. சித்தாந்தத்தைத் சித்தாந்தத்தால் சந்திக்க முடியாத - பிற்போக்குத்தனக் காவிக் கூட்டம் சிலையாக எழுந்து நிற்கும் தந்தை பெரியார் சிலையைச் சேதப்படுத்துவதும், செருப்பு மாலை அணிவிப்பதும், காவி நிறச் சாயத்தைப் பூசுவதுமான கீழ்த்தரமான இத்தகைய இழிசெயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
காவிச் சாயத்தை தந்தை பெரியார் சிலைமீது ஊற்றுவதால் காவியை தமிழ்நாட்டில் காலூன்றச் செய்யலாம் என்ற கனவு காணவேண்டாம். காவிச் சாயத்தை ஊற்றுவதன்மூலம், ஊற்றிய காவிக் கும்பலின் சாயம்தான் வெளுக்கும். இத்தகு செயல்கள் தந்தை பெரியார் கொள்கை மீது, அவர் தம் சித்தாந்தம் மீது உண்மையான திராவிட இயக்கங்கள் மீது மேலும் மேலும் உறுதியை, ஓங்கி ஒலிக்கவே செய்யும். சமூக வலைதளங்களில் தந்தை பெரியார் மீதும், திராவிட இயக்கத் தலைவர்கள்மீதும் கீழ்த்தரமான ஒளி-ஒலிபரப்புகள் நடந்துகொண்டுள்ளன.


ஒரு பார்ப்பன வார ஏடு, அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆரையும் சேர்த்து கீழ்த்தரமாக (செருப்படி என்ற சொல்லைக்கூடப் பயன்படுத்தி) எழுதுகிறது. அப்படியும் தமிழ் நாட்டு ஆட்சியாளர்களுக்குக் கோபம் வரவில்லை. அதிமுக ஆட்சியில் தொடர்ந்து தந்தை பெரியார் சிலையை அவமதிக்கும் அவலம் அரங்கேறி வருகிறது. திருப்பத்தூர் (வேலூர்), தாராபுரம், வேதாரண்யம் அருகே தேத்தாக்குடி, காஞ்சிபுரம் அருகே கலியப்பேட்டை, நேற்றிரவு (16.7.2020) கோவை சுந்தராபுரம் முதலிய இடங்களில் தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்படுகிறது. கோவை சுந்தராபுரத்தில் இரவோடு இரவாக காலிகள் தந்தை பெரியார் சிலைமீது காவிச் சாயத்தை ஊற்றி இருக்கிறார்கள். (சில இடங்களில் அண்ணல் அம்பேத்கர் சிலையும் அவமதிக்கப்படுகிறது).
அண்ணா பெயரையும், ‘திராவிட’ பெயரையும் கட்சியில் வைத்துக்கொண்டு இருக்கும் அண்ணா திமுக ஆட்சியில் இவற்றையெல்லாம் கண்டுகொள்வதில்லை. அதிகபட்சமாகப் போனால், பெரியார் சிலையை அவமதித்த ஆசாமி ‘மன நோயாளி’ என்று கூறி, காவல்துறை தனது கோப்பை தந்திரமாக முடித்துக் கொண்டு வருகிறது. புராணங்களில் உள்ளதை உள்ளபடி வெளியிட்டால், அந்தத் தோழர்கள்மீது பல பிரிவுகளில் வழக்கு, அதே நேரத்தில் ‘யூடியூப்’ மூலமாக தந்தை பெரியாரையும், திராவிட இயக்கத் தலைவர்களையும் தாறுமாறாக திட்டித் தீர்ப்பவர்களைக் கண்டுகொள்ளாத நிலை!


பார்ப்பனர் ஒருவரால் நடத்தப்படும் ஒரு ‘யூ டியூப்’ சேனலில், இன்னொரு பார்ப்பன நடிகரை அழைத்துப் பேட்டி காண்பதும், அந்த நடிகர் தந்தை பெரியாரைக் கூலி என்று கூறுவதும் எல்லாம் தமிழ்நாடு அரசுக்கோ, காவல்துறையின் உளவுப் பிரிவுக்கோ, சைபர் க்ரைம் பிரிவுக்கோ தெரியாதா? தந்தை பெரியார் படத்தை சுவரொட்டியில் அச்சிட்டால் மட்டும் போதுமா? அதிமுகவிலோ, ஆட்சியிலோ தந்தை பெரியாரை உண்மையாக மதிக்கும் ஒரே ஒருவர்கூட கிடையாதா? பா.ஜ.க.வின் மிரட்டலுக்கோ, அதிகார அச்சுறுத்தலுக்கோ கைகட்டி சேவகம் செய்யும் ஓர் ஆட்சி மாநிலத்தில் இருப்பதால், காவிக் கூட்டம் துள்ளித் திரிகிறது. காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால். மக்களே நேரிடையாகச் சந்திக்கும் நிலை ஏற்படாதா? அந்த நிலையை அ.தி.மு.க. அரசு எதிர்பார்க்கிறதா? இன்னும் எத்தனை மாதத்துக்கு இந்தப் போக்கு? பார்ப்போம்! பார்ப்போம்!!
மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதுவும் தந்தை பெரியாரை அவமதிப்பவர்களை, கட்சிகளைக் கடந்து, கடவுள், மத நம்பிக்கைகளைக் கடந்து கர்ச்சித்து எழுவார்கள் என்பதுதான் கடந்த கால வரலாறு. (1971 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் நினைவிருக்கட்டும்).” என்று அறிக்கையில் கி.வீரமணி தெரிவித்துள்ளார். 

click me!