சபாஷ்... சரியான முடிவு... முதல்வர் எடப்பாடியாரை பராட்டிய கி.வீரமணி..!

By Thiraviaraj RMFirst Published Oct 30, 2020, 12:01 PM IST
Highlights

தற்போதைய சூழ்நிலையில் உள்ள ஒரே வழி! தமிழக அரசின் இந்த ஆணை முடிவை வரவேற்கிறோம்! மாநில அரசின் இந்த உரிமை உணர்வு தொடரட்டும்

“சமூக நீதி காக்கவும், அரசுப்பள்ளி மாணவச் செல்வங்களின் நலன் கருதியும், தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயின்று நீட் தேர்ச்சி பெற்ற ஏழை மாணவ, மாணவிகளின் மருத்துவக் கனவுகளை நிறைவேற்றும் விதமாக அவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு அளிக்க அரசாணை வெளியிடப்படுகிறது” என்று தனது ட்விட்டரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.தமிழக அரசின் இந்த ஆணை முடிவை வரவேற்கிறோம், மாநில அரசின் இந்த உரிமை உணர்வு தொடரட்டும் எனத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

 இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பிய, தமிழ்நாட்டு மருத்துவக் கல்வி இடங்களில் 7.5 சதவிகிதம், தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்படவேண்டும் என்ற உள் ஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதல் தராமல் சுமார் இரண்டு மாதங்களாக இழுத்தடிப்பதோடு, மேலும் சில வாரங்கள் ஆகலாம் என்று இவ்வாண்டு கலந்தாய்வு தொடங்கவேண்டிய காலகட்டத்திலும் ஆளுநர் கூறிய நிலையில், தமிழ்நாட்டின் அத்துணை கட்சிகளும், தலைவர்களும் வற்புறுத்தியும், அதற்கு மதிப்பளிக்கத் தவறிய நிலையில், தமிழ்நாடு அரசு, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 162 ஆவது பிரிவினைப் பயன்படுத்தி, தனது செயற்பாட்டினை ஒரு அரசு ஆணையாகவே போட்டு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
 
மருத்துவ மாணவர்கள் தேர்வுமூலம் ஒரு கதவு திறக்கப்படுகிறது. தமிழக அரசின் கொள்கை முடிவு  ஆகவும் அமைவதால், இது தற்போதைய சூழ்நிலையில் உள்ள ஒரே வழி! தமிழக அரசின் இந்த ஆணை முடிவை வரவேற்கிறோம்! மாநில அரசின் இந்த உரிமை உணர்வு தொடரட்டும்’’ என அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல் தமிழக அரசின் துணிச்சலான நடவடிக்கையைப் பாராட்டுகிறோம் என்று ம.ஜ.க பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''அரசுப் பள்ளிகளில் படித்த தமிழக மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் இடம் கிடைக்கும் வகையில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க நேற்று தமிழக அரசு அரசாணை வழங்கியிருப்பதை மனிதநேய ஜனநாயகக் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம்.

தமிழக சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு, கவர்னர் ஒப்புதல் வழங்காமல் தாமதித்த நிலையில், சமூக நீதியைக் காப்பாற்றும் வகையில் தமிழக அரசு இம்முடிவை மேற்கொண்டுள்ளதை துணிச்சலான நடவடிக்கை  எனப் பாராட்டுகிறோம். இதற்கு எந்த ஆபத்தும் நேராத வகையில் தமிழக அரசு கவனமுடன் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்'' எனக் கூறியுள்ளார். 

click me!