கேரள மாநிலத்தில் மூத்த அரசியல் பிரமுகர்களில் ஒருவரும் காங்கிரஸ்(எம்) கட்சியின் தலைவருமான கே.எம்.மாணி உடல் நலக்குறைவால் இன்று மாலை மரணமடைந்தார்./அவருக்கு வயது 86 இவர் 13 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.
ரிங்கோழக்கல் மாணி மாணி என பரவலாக அறியப்படும் கே. எம். மாணி இந்திய அரசியல்வாதியும் கேரள காங்கிரசின் ஒரு பிரிவான கேரள காங்கிரஸ்(மா) கட்சியின் தலைவரும் ஆவார்.
கேரள மாநிலத்தின் நிதி அமைச்சராக முன்னர் பணியாற்றியபோது 13 நிதிநிலை அறிக்கைகளை சட்டசபையின் சமர்ப்பித்த சாதனை படைத்தவர்.
கேரள சட்டசபையின் மிக நீண்டநாள் உறுப்பினராகவும் இருந்தவர். கேரள அரசில் நீண்டநாள் அமைச்சராகப் பணியாற்றிய பெருமையையும் உடையவர். 1965-ம் ஆண்டில் பாலை சட்டமன்றத் தொகுதி உருவானதிலிருந்து தொடர்ந்து அத்தொகுதி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில், சமீபகாலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த மாணி கடந்த ஞாயிற்றுக்கிழமை மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் சிறுநீரகம் பாதிக்கப்பட்ட நிலையில் கொச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் சந்தித்து நலம் விசாரித்தார்.
அவரது உடல்நிலை முன்னேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மாலை மே.எம்.மாணி காலமானார்.