
ஜெயலலிதாவின் பிறந்த நாளில் அமைப்பு தொடங்குவது குறித்த முடிவை அறிவிப்பேன் என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கூறியிருந்தார். அதன்படி நாளை பேரவையை தொடங்க உள்ளார்.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க இரண்டாக பிரிந்தது. ஓ.பன்னீர் செல்வம் ஒரு அணியாகவும், சசிகலா தலைமையில் இன்னொரு அணியும் செயல்பட்டு வருகிறது.
முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ஓ.பி.எஸ் சசிகலா மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றதையடுத்து புதிய முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்றார்.
இதையடுத்து பல்வேறு தரப்பினர் ஓ.பன்னீர் செல்வத்தை ஆதரித்து வந்த நிலையில், ஜெயலலிதா அண்ணன் மகள் தீபாவும் ஓ.பி.எஸ்சை ஜெயலலிதா சமாதியில் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
அப்போது பேட்டி அளித்த தீபா அ.தி.மு.க.வில் நானும், ஓ.பன்னீர்செல்வமும் இரு கரங்களாக இணைந்து செயல்படுவோம் என தெரிவித்தார். இதனால் அரசியல் களத்தில் இருவர் மீதும் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது.
அதில், ஜெயலலிதா பிறந்தநாள் அன்று ஆர்.கே.நகரில் பொதுக்கூட்டம் நடைபெற இருப்பதாகவும், அதில் ஓ.பன்னீர்செல்வமும், தீபாவும் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.
அதில், காலையில் மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் தீபா மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்.
பின்னர் அவர் வீட்டு அருகே கட்சி அலுவலகத்தை திறந்து வைக்கிறார். அதன்பிறகு தீபா பேரவையின் பெயரையும் கொடியையும் அறிமுகம் செய்கிறார்.
இவ்வாறு அதில் குறிபிடப்பட்டுள்ளது.