
எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராக தேர்வு செய்தது சட்டமன்ற உறுப்பினர்கள் தானே தவிர சசிகலாவோ தினகரனோ அல்ல என நிதித்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இரட்டை இலை விவகாரத்தில் டிடிவி தினகரன் சிறைக்கு சென்றதில் இருந்து எடப்பாடி அமைச்சரவை தினகரனுக்கு எதிராகவே செயல்பட்டுக்கொண்டு வருகிறது.
மேலும் நிதி அமைச்சர் ஜெயக்குமார் ஒரு படி மேலே போய் முதலமைச்சரின் மனசாட்சியாய் பேட்டி அளித்து வருகிறார்.
அதன் ஒருபகுதியாக டிடிவி தினகரன் மீண்டும் கட்சி பணி ஆற்றுவேன் என கூறியபோது மிகவும் கண்டிப்புடன் மறுப்பு தெரிவித்தவர்களில் முதல் ஆள் ஜெயக்குமார்தான்.
இதனால் டிடிவி ஆதவாளர்களுக்கும் ஜெயக்குமாருக்கும் இடையே பெரும் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.
இதனிடையே பேசிய டிடிவி ஆதவாளர் எம்.எல்.ஏ வெற்றிவேல், டிடிவி தினகரன் குறித்து தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தால், கட்சியையும் ஆட்சியையும் இழக்க வேண்டி இருக்கும் என்று தெரிவித்தார்.
இதைதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், கட்சி மற்றும் ஆட்சியை வழிநடத்துவது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிதான் என்றும், எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன்தான் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டாரே தவிர சசிகலா பதவி வழங்கவில்லை என்றும் கூறினார்.