
கடந்த 22 ஆம் தேதி அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டதில் இருந்து, நாள்தோறும் வதந்திகள் கிளம்பிய வண்ணம் உள்ளன. இந்த
நிலையில், அஇஅதிமுக 45 ஆவது ஆண்டு தொடக்க நாள் விழா குறித்து, ஜெயலலிதா ஒப்புதலோடு நிகழ்ச்சி நிரல், அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
கழக பொது செயலாளரும், தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சி தலைவி ஜெ. ஜெயலலிதாவின் ஒப்புதலோடு என்ற வாசகங்கள், பெரிய எழுத்துக்களால் அச்சிடப்பட்டு
வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 22 ஆம் தேதியில் இருந்து இன்று வரை முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 22 நாட்கள் ஆகின்றன. இந்த 22 நாட்களில்
ஒரு கடிதம் கூட குறிப்பாக உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர் பட்டியல் கூட ஜெயலலிதா ஒப்புதலோடு என்ற வார்த்தைகளோடு வெளியிடப்படவில்லை. ஜெ.வின்
ஒப்புதல் என்ற வார்த்தையைப் பார்த்தவுடன் அதிமுகவின் தொண்டர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் மிகுந்த மகிழ்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.
அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் 17.10.2016 அன்று காலை 10 மணியளவில், ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில், அவைத்
தலைவர் மதுசூதனன் கொடியேற்றி வைத்தும், எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தும் தொடக்க விழா மலரை வெளியிட உள்ளார் எனவும்
குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் அதிமுகவின் அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.