ஜல்லிக்கட்டு மசோதா நிறைவேற்றப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுவதை அடுத்து, சாமானியர்கள் வென்ற புரட்சி என்றும், தமிழனின் தளரா மனமும் அயரா தன்மையும் கண்ட வெற்றி என்றும் நடிகர் கமல் ஹாசன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
2017 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடைபெற்றன. தமிழகம் மட்டுமல்லாது, தமிழ்நாட்டுக்கு வெளியேயும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. தமிழகத்தில் முதல் 7 நாட்கள் பெரும்பாலும் அறவழியில் நடந்து வந்த போராட்டங்கள், 8-வது நாளில் காவல்துறை - பொதுமக்களுக்கு இடையே மோதல் ஏப்ட்டு நிறைவுக்கு வந்தன.
சென்னை மெரினாவில் நடந்த இந்த போராட்டம் இந்திய அளவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இதையடுத்து, ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டத்தை, நிரந்தர சட்டமாக்கும் மசோதாவும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களான ராஜசேகர், கார்த்திகேய சேனாதிபதி, ஹிப்ஹாப் ஆதி, ராஜேஸ், அம்பலத்தரசு ஆகியோர் முன்னிலையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்து. இதன் பிறகு, குடியரசு தலைவர் ஒப்புதலும் பெறப்பட்டது. 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 ஆம் தேதி ஜல்லிக்கட்டு சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டது.
ஜல்லிக்கட்டு மசோதா நிறைவேற்றப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவுடைந்துள்ளது. இதனை நடிகர் கமல் ஹாசன், ஜல்லிக்கட்டு போராட்டத்தின் ஆண்டு விழா என்று குறிப்பிட்டு டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து கமல் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது; இன்று ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் ஆண்டு விழா. சாமானியர்கள் வென்ற புரட்சி. தமிழனின் தளரா மனமும் அயரா தன்மையும் கண்ட வெற்றி. வாழ்க நற்றமிழர். என்று கமல் குறிப்பிட்டுள்ளார்.