உடல் அடக்கத்தை தடுத்தால் 3 ஆண்டுகள் ஜெயில்... அவசர சட்டத்தை நிறைவேற்றிய எடப்பாடி அரசு..!

By vinoth kumarFirst Published Apr 26, 2020, 4:00 PM IST
Highlights

கொரோனாவால் உயிரிழந்தோரின் உடல் அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தால் குறைந்தபட்சமாக ஓராண்டு முதல் அதிகபட்சமாக 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் அவசர சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. 

கொரோனாவால் உயிரிழந்தோரின் உடல் அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தால் குறைந்தபட்சமாக ஓராண்டு முதல் அதிகபட்சமாக 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் அவசர சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. 

உலகமே கொரோனா பீதியில் இருந்து வரும் நிலையில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் ஆகியோர் தங்கள் உயிரை பணயம் வைத்து, சுயநலமின்றி, பொதுநலத்துடன் மக்களுக்காக சேவையாற்றி வருகின்றனர். ஆனால், இவர்கள் மீது பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டு வந்தது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சமீபத்தில் சென்னையில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட பிரபல நரம்பியல் மருத்துவர் சைமன் சிகிச்சை பலனின்றி தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். 

இதனையடுத்து, அவரது உடலை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி கிறிஸ்துவ கல்லறையில் அடக்கம் செய்ய முயன்றபோது, அவரை அங்கு அடக்கம் செய்யக்கூடாது என்று அந்தப் பகுதியை சேர்ந்தவர்கள் தடுத்து, கற்களை வீசி தாக்கியதில் ஆம்புலன்ஸ் வாகனம் சேதமடைந்தது. இதையடுத்து கூடுதலாக போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பாக அவரது உடல் வேலங்காடு இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.  இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோரின் உடல் அடக்கத்தை தடுத்தால் 3 ஆண்டுகள் சிறை என்னும் அவசர சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. 

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்: கொரோனா தொற்று நோயினால் உயிரிழந்தவர்களின் உடல்களை கண்ணியமான முறையில் அடக்கம்/தகனம் செய்வதைத் தடுக்கும் செயலையும், தடுக்க முயற்சிப்பதையும் தமிழ்நாடு பொது சுகாதார சட்டத்தின்படி குற்றமாக்கி கடுமையாக தண்டனை வழங்கும் நோக்கில் தமிழக அரசு அவசரச் சட்டம் ஒன்றை பிறப்பித்துள்ளது. 

இந்த அவசரச் சட்டத்தின்படி, அரசால் அறிவிக்கை செய்யப்பட்ட தொற்று நோயினால் உயிரிழந்தவர்களின் உடலை கண்ணியமான முறையில் அடக்கம்/ தகனம் செய்வதைத் தடுப்பதும், தடுக்க முயற்சிப்பதும் குற்றமாக்கப்பட்டு, அத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம், 1939, பிரிவு-74ன்படி அபராதம் உட்பட குறைந்தபட்சமாக ஓராண்டு சிறைத் தண்டனையும் அதிகபட்சமாக மூன்றாண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!