Jai Bhim Surya:"திமிர் பிடித்த சூர்யா".. எதற்கும் துணிந்தவனா நீ. பார்வர்டு பிளாக் திருமாறன் எச்சரிக்கை.

By Ezhilarasan BabuFirst Published Dec 15, 2021, 4:44 PM IST
Highlights

ஆனால் எல்லோரும் உன்னைப் பற்றி பேசிப்பேசி பெரிய ஆளாக உன்னை ஆக்கி வைத்திருக்கிறார்கள். ஜெய்பீம் பட விவகாரத்தில் இன்னும் மன்னிப்பு கேட்காமல் இருந்துவருகிறாய், அது உன்னுடைய திமிர் தனத்தைக் காட்டுகிறது,

ஜெய்பீம்  திரைப்படத்தில் அக்னிசட்டி வைத்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்க முடியாது  என சூர்யா திமிர்த்தனமாக இருந்து வருகிறார் என்றும், அரசாங்கத்தின் ஆதரவு இருக்கிறது என்ற ஒரே காரணத்தினால் அவர் இப்படி நடந்து கொள்கிறார் என்றும் தென்னிந்திய பார்வர்ட் பிளாக்  கட்சியின் தலைவர் திருமாறன் ஜி விமர்சித்துள்ளார் ஓடிடி தளத்தில் வெளியிட்டதால் சூர்யா தப்பித்துக் கொண்டார் என்றும், அடுத்து வருகிற எதற்கும் துணிந்தவன் படம் எப்படி ஓடுகிறது என்று ஒரு கை பார்க்கிறோம்  என்றும் அவர் சவால் விடுத்துள்ளார்.

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் முக்கிய வேடத்தில் சூர்யா நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் ஜெய் பீம்,  இந்தத் திரைப்படம் ஓடிடி இணையதளத்தில் வெளியாகி மொழி, இனம் கடந்து சர்வதேச அளவில் மக்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது. ஹாலிவுட் திரைப்படங்களையே பின்னுக்கு தள்ளும் அளவுக்கு பார்வையாளர்களை கொண்ட படமாக வெற்றிபெற்றுள்ளது. இப்படத்தில் பழங்குடியின இருளர்  ராஜாக்கண்ணு என்பவர் பொய் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட உண்மை சம்பவத்தை  மையமாக வைத்துப் புனைவுகளுடன் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் வரும் உதவி ஆய்வாளருக்கு குருமூர்த்தி என பெயரிடப்பட்டுள்ளது. அதேபோல் அவரது இல்லத்தில் வன்னியர்களின்  அடையாளங்களில் ஒன்றான அக்னி கலசம் காலண்டர் மாட்டப்பட்டுள்ளது. இந்த காட்சி மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு அவர்களையும், வன்னிய சமூகத்தையும் இழிவுபடுத்தும் நோக்கில் உள்ளதாக கூறி, பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து  உடனே அந்த காலண்டர் காட்சி மாற்றப்பட்டுள்ளது. ஆனால் அந்த காட்சி  வன்னிய சமூகத்தின் மீதுள்ள வன்மத்தின்காரணமாக வைக்கப்பட்டது என்றும், இதற்கு சூர்யா உடனே பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தொடர்ந்து பாமக குரல் எழுப்பி வருகிறது. இதனால் சூர்யாவுக்கும் -பாமகவுக்கும் இடையேயான மோதல் அதிகரித்துள்ளது. இதனையடுத்து இந்த படத்தில் உள்ள அனைத்திற்கும் தான்தான் பொறுப்பு ஏன தெரிவித்த இயக்குனர் ஞானவேல், அந்த குறிப்பிட்ட காட்சி குறித்து வருத்தம் தெரிவித்தார். ஆனால் அதில் பாமகவுக்கு திருப்தியில்லை என்று கூறப்படுகிறது. எனவே இந்த விவகாரம் முடிவின்றி தொடர்கிறது. இந்நிலையில் தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவர் திருமாறன் ஜி, நடிகர் சூர்யாவை விமர்சித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில், ஜெய்பீம் திரைப்படத்தில் அக்னி சட்டி காலண்டர் வைத்த விவகாரத்தில் இன்னும் மன்னிப்பு கேட்காமல் சூர்யா திமிர்த்தனமாக இருந்து வருகிறார். தனக்கு அரசாங்கத்தின் ஆதரவு இருக்கிறது என்பதற்காக அவர்  இப்படி நடந்து கொள்கிறார்.

ஜெய் பீம் திரைப்படத்திற்கு பிறகு தன்னை  ஒரு புரட்சியாளர் போல அவர் காட்டிக் கொள்கிறார். அவருடைய தம்பி சாதி படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கிறார், ஆனால் இவர் சாதி இல்லை என நடிக்கிறார், அவரது தந்தையை சிவக்குமார் இரண்டுமே இல்லாமல் குழப்பி விட்டு போகிறார். மொத்தத்தில் அவர்களது குடும்பமே ஒரு சைசான குடும்பம், சூர்யாவின் குடும்பம் நக்சல்பாரிகளின் கையில் இருக்கிறது, இந்தியாவுக்கு எதிராக யாரெல்லாம் பேசுகிறார்களோ அவர்களுக்கு ஆதரவாக பேசுபவராக சூர்யா இருக்கிறார், ஜெய்ஹிந்த் திரைப்படத்தில் பழங்குடிகளுக்கு ஆதரவாக பேசி இருக்கிறார், சாத்தான்குளம் விவகாரத்திற்கு குரல் கொடுத்தார், ஏன் முதுகுளத்தூர் மணிகண்டனுக்கு குரல்கொடுக்கவில்லை, நீ குரல் கொடுக்க வேண்டிய அளவிற்கு பெரிய ஆளும் இல்லை, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, திரு. திருமாவளவன், ஜான் பாண்டியன் மற்றும் முக்குலத்தோர் தலைவர்கள் கொடுத்த குரலுக்கே ஒன்றும் எடுபடவில்லை. இந்த நேரத்தில் சூர்யா குரல் கொடுத்து ஒன்றும் நடக்கப்போவதும் இல்லை. ஆனால் குறைந்தபட்ச ஆறுதலாவது சூர்யா சொல்லியிருக்க வேண்டும். ஆனால் எல்லோரும் உன்னைப் பற்றி பேசிப்பேசி பெரிய ஆளாக உன்னை ஆக்கி வைத்திருக்கிறார்கள். ஜெய்பீம் பட விவகாரத்தில் இன்னும் மன்னிப்பு கேட்காமல் இருந்துவருகிறாய், அது உன்னுடைய திமிர் தனத்தைக் காட்டுகிறது, 

ஜெய்பீம் திரைப்படத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் அடையாளத்தையும், மற்றும் அக்னிசட்டி காலண்டரை வைத்து படம் எடுத்திருக்கிறார், அதை எதிர்த்தால் அந்த இடத்தில் லட்சுமி காலண்டர் வைக்கிறார், மொத்தத்தில் பெரும்பான்மை  சமூகத்தை இழிவு படுத்த வேண்டும், அந்த சமூகத்தை வன்முறை சாதியாக மாற்ற வேண்டும் என்பதுதான் இவரின் நோக்கம். பெரும்பான்மை சமூக மக்களின் மனதை புண்படுத்தும் வகையில் படம் எடுக்கிறார் என்றால் இவர்களுக்கு பின்னால் அரசாங்கம் துணை இருக்கிறது, அந்த திமிர்த்தனம் தைரியம் இவர்களுக்கு இருக்கிறது. குறிப்பாக இனி எந்த ஒரு சமூகத்தையாவது இழிவுபடுத்தும் வகையில் நடிகர் சூர்யா படம் எடுத்தால், அதை தமிழ்நாட்டில் இனி ஓட விடமாட்டோம். நடிகர் சூர்யா உன் படம் இனி ஓட வேண்டுமென்றால் நீ ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டும். தொடர்ந்து இந்து மதத்தை இழிவாக பேசுவதை வழக்கமாக வைத்துள்ளாய், தொடர்ந்து திமிர்த்தனமாக நடந்து கொண்டிருக்கிறாய், உன் திமிரை அடக்க வேண்டிய காலம் மிக விரைவில் வந்து கொண்டிருக்கிறது. உவ்வாறு அவர் எச்சரித்துள்ளார். அவரின் இந்த பேச்சு சூர்யா ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

click me!