Jai Bhim: என்னை குப்புற தள்ளி ஓங்கி குத்திவிட்டான்.. ஞானவேல் குறித்து அதிரடியாக பேசிய சிவக்குமார்.

By Ezhilarasan BabuFirst Published Dec 15, 2021, 1:53 PM IST
Highlights

அவன் முதலில் ஒரு படம் எடுத்தான், அந்தப் படத்தைப் பார்த்து விட்டு படமெடுக்க நீ லாயக்கு கிடையாது என பேனாவை பிடுங்கிக்கொண்டு விரட்டி விட்டேன், பிறகு ரோச பட்டு, துணிந்து ஒரு அடி அடித்து, இந்த படத்தை எடுத்து என்னை குப்புற தள்ளி ஓங்கி குத்து விட்டான்

ஞானவேல் எடுத்த முதல் படத்தை பார்த்துவிட்டு படம் எடுக்க உனக்கு தகுதியே இல்லை என பேனாவை பிடுங்கிக்கொண்டு விரட்டி விட்டேன், ஆனால் விடா முயற்சியாக இருந்தது ஜெய்பீம் என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த என்னை குப்புற தள்ளி ஓங்கி குத்தி விட்டார் ஞானவேல் என  நடிகர் சிவகுமார் புலங்காகிதம் அடைந்துள்ளார். இனி ஞானவேல் நினைத்தாலும் கூட இப்படி ஒரு படத்தை எடுக்க முடியாது என்றும், முதலமைச்சர் அந்த படத்தை பார்த்து உணர்ச்சிவயப்பட்டு ஒட்டுமொத்த தமிழகத்திலும் இருக்குற பழங்குடியின மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய உத்தரவு போட வைத்திருக்கிறது இந்த படம் என்றும் அவர் பாராட்டியுள்ளார். 

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் முக்கிய வேடத்தில் சூர்யா நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் ஜெய் பீம்,  இந்தத் திரைப்படம் ஓடிடி இணையதளத்தில் வெளியாகி மொழி, இனம் கடந்து சர்வதேச அளவில் மக்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது. ஹாலிவுட் திரைப்படங்களையே பின்னுக்கு தள்ளும் அளவுக்கு பார்வையாளர்களை கொண்ட படமாக வெற்றிபெற்றுள்ளது. இப்படத்தில் பழங்குடியின இருளர்  ராஜாக்கண்ணு என்பவர் பொய் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட உண்மை சம்பவத்தை  மையமாக வைத்துப் புனைவுகளுடன் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் வரும் உதவி ஆய்வாளருக்கு குருமூர்த்தி என பெயரிடப்பட்டுள்ளது. அதேபோல் அவரது இல்லத்தில் வன்னியர்களின்  அடையாளங்களில் ஒன்றான அக்னி கலசம் காலண்டர் மாட்டப்பட்டுள்ளது. இந்த காட்சி மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு அவர்களையும், வன்னிய சமூகத்தையும் இழிவுபடுத்தும் நோக்கில் உள்ளதாக கூறி, பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து  உடனே அந்த காலண்டர் காட்சி மாற்றப்பட்டுள்ளது. ஆனால் அந்த காட்சி  வன்னிய சமூகத்தின் மீதுள்ள வன்மத்தின்காரணமாக வைக்கப்பட்டது என்றும், இதற்கு சூர்யா உடனே பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தொடர்ந்து பாமக குரல் எழுப்பி வருகிறது. இதனால் சூர்யாவுக்கும் -பாமகவுக்கும் இடையேயான மோதல் அதிகரித்துள்ளது. இதனையடுத்து இந்த படத்தில் உள்ள அனைத்திற்கும் தான்தான் பொறுப்பு ஏன தெரிவித்த இயக்குனர் ஞானவேல், அந்த குறிப்பிட்ட காட்சி குறித்து வருத்தம் தெரிவித்தார். ஆனால் அதில் பாமகவுக்கு திருப்தியில்லை என்று கூறப்படுகிறது. எனவே இந்த விவகாரம் முடவின்றி தொடர்கிறது. இந்நிலையில் பலரும் சூர்யாவுக்கும்- பாமகவுக்கும் ஆதரவாக மாறிமாறி குரல்கள் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நடிகர் சிவக்குமார் மகன் சூர்யா, இயக்குனர் ஞானவேல் ஆகியோருடன் கம்யூனிஸ்டு மூத்த தலைவர் நல்லக்கண்ணு, முத்தரசன் ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அதற்கான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது.

இந்நிலையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சிவகுமார்  தான் கடந்து வந்த பாதைகளை நினைவுகூர்ந்து பேசினார். அதேபோல் ஜெய்பீம் திரைப்படத்தில்  கலை இயக்குனர் மற்றும் திரைப்பட இயக்குனர்களையும் அறிமுகம் செய்து வைத்து அவர் பாராட்டி பேசினார். அதில் சிவகுமார் பேசியது பின்வருமாறு:- இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இருக்கிற எல்லாரை காட்டிலும் மிகவும் வறுமையில் வளர்ந்தவன் நான். இன்று எனது குடும்பத்தினர் நட்சத்திர ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டால் மத்தியான சாப்பாட்டுக்கு மட்டும் 15,000 ஆகிறது. ஆனால் ஒரு வேளை அரிசி சாதத்திற்கு மிகவும் கஷ்டப்பட்டவன் நான். ஏழு ஆண்டுகள் ஓவியம் வரைந்து ஊர் ஊராகத் திரிந்து நான் 7 ஆண்டுகளில் சம்பாதித்த பணம் வெறும் 7 ஆயிரம் தான். ஏழு ஆண்டுகள் 15 ரூபாய் வாடகை அறையில் வாழ்ந்தவன் நான் என்றார். மேலும் பேசிய அவர், ஜெய்பீம் படக்குழுவினர் இங்கு வந்திருக்கின்றனர், அந்த திரைப்படத்தில் உயர்நீதிமன்றத்தை போலவே அச்சு அசலாக உருவாக்கிய கலை இயக்குனர் கதிர் இவர்தான். கதிர் உருவாக்கிய அந்த நீதிமன்றம் செட் இன்று உலகம் முழுவதும் பாராட்டப்பட்டு வருகிறது.

ஒரிஜினல் ஹைகோர்ட்க்கும் அந்த படத்தில் வரும் கோர்ட்டுக்கும் எந்த வித்தியாசமும் தெரியாத அளவிற்கு செட்டு அமைத்து கலக்கியவர்தான் கதிர். அதேபோல இங்கே இயக்குனர் ஞானவேல் வந்திருக்கிறார். இவன் எனக்கு இன்னொரு மகன், ஞான வேலை இவன் என்றுதான் நான் சொல்ல முடியும், அவர் என்று நான் கூப்பிட முடியாது. ஏனென்றால் எனக்கு இன்னொரு மகன் ஞானவேல்,  அவன் முதலில் ஒரு படம் எடுத்தான், அந்தப் படத்தைப் பார்த்து விட்டு படமெடுக்க நீ லாயக்கு கிடையாது என பேனாவை பிடுங்கிக்கொண்டு விரட்டி விட்டேன், பிறகு ரோச பட்டு, துணிந்து ஒரு அடி அடித்து, இந்த படத்தை எடுத்து என்னை குப்புற தள்ளி ஓங்கி குத்து விட்டான் ஞானவேல். இப்படி இன்னொரு படத்தை ஞானவேல் நினைத்தாலும் மீண்டும் எடுக்க முடியாது. ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றி ஒரு படம் எடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு உணர்ச்சிவயப்பட்டு ஒவ்வொரு பழங்குடியின மக்களுக்கும் என்ன தேவை என்பதை அறிந்து அவர்களின் தேவைகளை உடனே செய்து கொடுக்கும்படி அரசு அதிகாரிகளுக்கு உத்தரவு போட வைத்திருக்கிறது இந்த படம். ஒடுக்கப்பட்ட குறவர் இனத்திற்கும் இருளர் இனத்திற்கும் பட்டா கொடுக்க சொல்லி உத்தரவு போட வைத்திருக்கிறது இந்த படம் என அவர் மேடையில் நெகிழ்ந்து பாராட்டினார்.
 

click me!