மீண்டும் தமிழகத்தில் மெகா ரெய்டு... பி.எஸ்.கே கட்டுமான நிறுவனம் உட்பட 11 இடங்களில் அதிரடி..!

By vinoth kumarFirst Published Apr 12, 2019, 1:40 PM IST
Highlights

மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட மொத்தம் 11 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதில் அரசு ஒப்பந்ததாரரான பிஎஸ்கே கட்டுமான நிறுவனம் தொடர்புடைய 7 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட மொத்தம் 11 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதில் அரசு ஒப்பந்ததாரரான பிஎஸ்கே கட்டுமான நிறுவனம் தொடர்புடைய 7 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. 

தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடாவைத் தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனைகளில் பலகோடி ரூபாய் பணம் சிக்கி உள்ளது. இதேபோல் வருமான வரித்துறையினரும் சோதனை நடத்தி, கோடிக்கணக்கில் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். கடந்த வாரம் திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் சோதனை நடத்தி பல கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது. 

இந்நிலையில் பிஎஸ்கே கட்டுமான நிறுவனம் அரசின் கட்டுமானப் பணிகளை ஒப்பந்த அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. இந்நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் கணக்கில் வராத பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக, சென்னை நுங்கம்பாக்கத்தில் வருமான வரி புலனாய்வு நிறுவன அலுவலகத்தில் இயங்கும் தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், பிஎஸ்கே கட்டுமான நிறுவனம் தொடர்புடைய 7 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். நாமக்கல்லில் 4 இடங்களிலும், சென்னையில் 3 இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. 

நாமக்கல்லை அடுத்த நடுக்கோம்பையில், பிஎஸ்கே உரிமையாளர் பெரியசாமியின் வீடு, அலுவலகத்தில் 5 அதிகாரிகள் குழு சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாமக்கல்-சேலம் சாலையில், பிஎஸ்கே நிறுவனத்தோடு தொடர்புடைய செல்வம் என்பவரது அலுவலகத்திலும் 3 அதிகாரிகள் குழு சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும் ஆகாஷ் பாஸ்கரன், சுஜய் ரெட்டி பைனான்சியர்களின் வீடுகளிலும் சோதனை நடைபெறுகிறது. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக, கணக்கில் வராத பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

click me!