ரொம்ப லேட்.. முன்னாடியே அமைச்சர் பதவி கொடுத்து இருக்கனும்.. ‘வாரிசு’ சர்ச்சைக்கு விளக்கம் கொடுத்த பொன்முடி

By Raghupati RFirst Published Dec 13, 2022, 2:40 PM IST
Highlights

உதயநிதி ஸ்டாலினுக்கு தாமதமாகத்தான் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் பொன்முடி விளக்கம் கொடுத்துள்ளார்.

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று, முதல்வராக மு.க ஸ்டாலினும், 33 அமைச்சர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர். பின்னர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அமைச்சரவையில் துறைகள் மாற்றம் நடைபெற்றது. எனினும், அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறவில்லை.

திமுக அமைச்சரவை பொறுப்பேற்றபோதே, கட்சியின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. பின்னர், உதயநிதி அமைச்சராக வேண்டும் என்று சில அமைச்சர்கள் பேசினர். ஆனால் முதல்வர் மு.க ஸ்டாலின் மவுனமாக இருந்துவிட்டார். இந்நிலையில், திமுக உட்கட்சித் தேர்தல்கள் முடிந்து, இளைஞரணிச் செயலாளராக மீண்டும் உதயநிதி ஸ்டாலின் தேர்வானார்.

இதையடுத்து, அவரை அமைச்சராக்க வேண்டும் என்று அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் பேசி வந்தனர். இந்த நிலையில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினரும், திமுகவின் இளைஞரணிச் செயலாளருமாக பதவி வகித்து வரும் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவையில் தற்போது இடம் கிடைத்துள்ளது.

இதையும் படிங்க.. பெரிய தூண்டில் போட்ட ஓபிஎஸ்.. குஜராத் டூர் சக்சஸ்.. எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சி கொடுத்த ‘அந்த’ போட்டோ !

உதயநிதி ஸ்டாலினை, அமைச்சரவையில் சேர்க்க ஆளுநர் ஆர்.என் ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து பதவியேற்பு விழா ஆளுநர் மாளிகையின் தர்பார் அரங்கில் நாளை காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அமைச்சர் பொன்முடி. அப்போது பேசிய அவர், திமுக இளைஞர் அணி செயலாளராக உள்ள உதயநிதிக்கு எல்லா தகுதியும், திறமையும் உள்ளது.

மிக திறமையுள்ள இளைஞர். திரைத்துறை, அரசியல் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் அவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். வாரிசு அரசியல் என்ற குற்றச்சாட்டு ஒன்றும் புதிது இல்லை. ஸ்டாலின் வரும் போது இதை தான் கூறினார்கள். இவற்றையெல்லாம் மக்கள் பார்த்துக் கொள்வார்கள். இது எல்லா கட்சியிலும் இருப்பது தான் அதில் ஒன்றும் தப்பு இல்லை. உதயநதிக்கு அமைச்சர் பொறுப்பு கொடுப்பது கூட்டான ஒரு முடிவு தான். அவருடன் இணைந்து நாங்களும், எங்களுடன் இணைந்து அவரும் செயல்படுவார்.

1½ ஆண்டுக்கு முன்பே அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்து இருக்க வேண்டும். இதை கால தாமதமாக நான் கருதுகிறேன். அவருக்கு எந்த துறை ஒதுக்கப்படும் என்பதை முதலமைச்சர் நாளை அறிவிப்பார். முதலிலே அவரை அமைச்சராக ஆக்கி இருந்தால் திராவிட மாடல் ஆட்சியை சிறப்பாக நடத்தி வந்திருப்பார். அவருக்கு வழங்க உள்ள பொறுப்பில் திறம்பட செயல்படுவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்று கூறினார்.

இதையும் படிங்க.. 2023ல் பெரும் போர் மட்டுமா! இன்னும் பல அதிர்ச்சிகள் காத்திருக்கு, உஷார் !! நாஸ்டர்டாமஸ் சொன்ன கணிப்பு !

click me!