புதிய அரசு அமைந்த ஒரு மாதத்துக்குள் விமர்சிப்பது அரசியல் அநாகரீகம்... பாஜக தலைவர் ஆவேசம்..!

By Asianet TamilFirst Published Jun 12, 2021, 8:51 PM IST
Highlights

புதிய அரசு அமைந்த ஒரு மாதகாலத்துக்குள்ளாகவே குறை சொல்வது அரசியல் நாகரீகம் அல்ல என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமிக்கு சட்டப்பேரவை பாஜக கட்சித் தலைவர் நமச்சிவாயம் பதில் அளித்துள்ளார்.
 

புதுச்சேரி மண்ணாடிப்பட்டில் நமச்சிவாயம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “பிரதமர் தடுப்பூசி செலுத்துவதை தொடர்ந்து வலியறுத்தி வருகிறார். புதுச்சேரியில் ஜூன் 16 முதல் 19 வரை தடுப்பூசி திருவிழா அரசு நடத்த உள்ளது. தடுப்பூசி செலுத்துவதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. கொரேனாவை விரட்ட வேண்டும் என்றால், ஒரே தீர்வு தடுப்பூசி மட்டும்தான். புதுச்சேரியில் உள்ள அனைத்து தொகுதி மக்களுக்கும் தடுப்பூசி செலுத்தி கரோனாவை விரட்டுவதற்கான நடவடிக்கைகளை புதுச்சேரி அரசு எடுத்து வருகிறது.


பொதுமக்கள் அனைவரும் இதை பயன்படுத்திகொள்ள வேண்டும். மத்திய அரசு அனைத்து மாநிலத்துக்கும் இலவசமாக தடுப்பூசி வழங்கும் என பிரதமர் தெரிவித்துள்ளார். இதற்காக பிரதமருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். முன்னாள் முதல்வர் நாராயணசாமி தேர்தல் மூலமும் மக்களாலும் புறக்கணிக்கப்பட்டவர். புதிய அரசை அவர் குறைச் சொல்வது அபத்தமாக உள்ளது. சென்ற முறை, தேர்தல் முடிந்து 22 நாட்களுக்கு பிறகுதான் அரசாங்கமே பதவியேற்றது. எனவே, தேவையின்றி எங்கள் முதல்வரையும், அரசையும், பாஜக- என்.ஆர்.காங்கிரஸையும் குறை சொல்வதை மக்கள் ஏற்கமாட்டார்கள்.
முதல்வர் பொறுப்பேற்ற பிறகு பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன. கொரோனா நிவாரண நிதி அறிவிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. இதெல்லாம் இந்த அரசு எடுத்த சீரிய முயற்சி. கூட்டணியில் சில ஒப்பந்தங்கள், பேச்சுவார்த்தைகளினால் காலதாமதம் ஏற்பட்டிருக்கலாம். முதல்வர் பதவியேற்ற உடனே அவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. எனவே அமைச்சரவை அமைப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அவர் குணமடைந்து திரும்பிய பிறகு தொடர்ந்து நடவடிக்கைகளை எடுக்கிறார். எல்லாம் நல்லமுறையில் நடக்கிறது.
அடுத்தவர்களை குறைசொல்லும் முன்பு முன்னாள் முதல்வர் நாராயணசாமி தனது மனசாட்சியை தொட்டு பார்க்க வேண்டும். புதிய அரசு அமைந்த ஒரு மாதகாலத்துக்குள்ளாகவே குறை சொல்வது அரசியல் நாகரீகம் அல்ல. அமைச்சர்கள் பதவியேற்பு விழா குறித்து முதல்வர் அறிவிப்பார்” என்று நமச்சிவாயம் தெரிவித்தார்.
 

click me!