முதலில் கணிக்கும், ஆன்லைக்கும் உள்ள வேறுபாட்டை செல்லூர் ராஜூ தெரிந்து கொள்ள வேண்டும் என அதிரடி சரவெடியாக பதிலளித்துள்ளார்.
தென் மாவட்டங்களில் கூட்டுறவு சங்கங்கள் வழியாக விவசாயிகளுக்கு விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்குதல், உர விநியோகம் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் சமீபத்தில் நடைபெற்றது. அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஐ. பெரியசாமி, கூட்டுறவுத்துறை அமைச்சர் கடந்த ஆட்சியில் விவசாயிகள் அல்லாதவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி வழங்கியுள்ளது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்த முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சரான செல்லூர் ராஜூ, “ஐ.பெரியசாமிக்கு இன்னும் துறையை பற்றி ஒன்றும் தெரியவில்லை. அவர் விருப்பம் இல்லாமல் அத்துறையில் அமைச்சராக உள்ளார். அந்த துறையை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் மனவெறுப்பில் உள்ளதாகவும் கூறுகின்றனர். தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்பட்ட அனைத்து கடன் விவரங்களும் கணினி மூலம் பதிவேற்றப்பட்டுள்ளதாகவும், என்ன கடன், யார் வாங்கியது என்ற விவரங்கள் உள்ளது. தவறு செய்தவர்கள் மீது அதிமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். ஒரு துறையைப் பற்றி பேசும் போது அதைப் பற்றி தெரிந்து கொண்டு பேசுவது ஐ.பெரியசாமிக்கு நல்லது என்றும் கூறினார்.
அமைச்சர் செல்லூர் ராஜூவிற்கு இன்றைய செய்தியாளர் சந்திப்பில் பதிலளித்துள்ள அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியதாவது: தமிழ்நாட்டில் தான் கூட்டுறவு சங்கங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டுள்ளதாக செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். அவரைப் போல ஒரு விஞ்ஞானப்பூர்வமான அமைச்சரை யாரும் பார்க்க முடியாது. அவருக்கு இருக்குற அளவுக்கு அறிவு யாருக்கும் இருக்காது. கணினிக்கும், ஆன்லைக்கும் வேறுபாடு இருக்கு. தமிழகத்தில் தொடங்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் உள்ள கணினி கடன் வழங்குகிற மத்திய கூட்டுறவு வங்கிகளுடன் இதுவரை இணைக்கப்படவே இல்லை. இந்நிலையில் எப்படி ஆன்லைனில் கடன் விவரங்கள் குறித்து நீங்கள் பார்க்க முடியும். முதலில் கணிக்கும், ஆன்லைக்கும் உள்ள வேறுபாட்டை செல்லூர் ராஜூ தெரிந்து கொள்ள வேண்டும் என அதிரடி சரவெடியாக பதிலளித்துள்ளார்.