எதிர்வரும் உள்ளாட்சி மன்ற தேர்தலில், அதிமுக-பாஜக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும், பாஜக கொண்டுவந்த முக்கிய சட்ட மசோதாக்களை நிறைவேற்ற அதிமுக உறுதுணையாக இருந்துள்ளது.
திமுக சித்தாந்தத்தின் அடிப்படையில் பெரியார் பிறந்த தினத்தை சமூக நீதி நாளாக கொண்டாடுவதில் தவறில்லை என்றும், ஆனால் சமூகநீதி என்பது பாஜகவின் தான் உள்ளது என்றும் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். நேற்று பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த தினம் நாடு முழுவதும் பாஜகவினரால் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் மோடி 20 ஆண்டுகள் பிரதமராகவும், முதல்வராகவும் மக்களுக்கு ஆற்றிய சேவையை கௌரவிக்கும் விதமாக நேற்று முதல் 21 நாட்கள் கொண்டாடப்பட உள்ளது.
இந்நிலையில் பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மோடியின் பிறந்த தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதில் கலந்து கொண்ட மாநிலத் தலைவர் அண்ணாமலை நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகம் வந்த ஆளுநரை முதலமைச்சர் ஸ்டாலின் விமான நிலையம் சென்று வரவேற்றது ஆச்சரியமாக உள்ளது. புதிய ஆளுநர் நியமனத்தில் எந்த உள்நோக்கமும் இல்லை, நாகலாந்தில் கலவர பூமியாக இருந்து வந்த நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக அங்கு ஆளுநராக ஆர்.என் ரவி நியமிக்கப்பட்டார். ஆனால் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அங்கு சுமுகமான நிலைமையை ஏற்படுத்தினார். அதற்கு அடுத்த முக்கிய மாநிலமான தமிழகத்திற்கு ஆளுநராக அவரை குடியரசுதலைவர் நியமித்துள்ளார்.
எதிர்வரும் உள்ளாட்சி மன்ற தேர்தலில், அதிமுக-பாஜக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும், பாஜக கொண்டுவந்த முக்கிய சட்ட மசோதாக்களை நிறைவேற்ற அதிமுக உறுதுணையாக இருந்துள்ளது. அதனால் அதிமுகவுக்கு பாஜக நன்றி கடன் பட்டிருக்கிறது, அதிமுக பெரிய கட்சி அதிக அளவில் சட்டமன்ற உறுப்பினர்களை வைத்துள்ள கட்சி, அதனால் பாஜக விட்டுக் கொடுத்துப் போக வேண்டிய இடத்தில் இருக்கிறது. பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் இருந்து மோடி தலைவராக வந்திருக்கிறார் சமூகநீதி என திராவிட கட்சிகள் பேசுவதை உண்மையிலேயே பாஜக செய்து வருகிறது, மற்ற தலைவர்களை பற்றி தவறாக பேசுவது பாஜகவின் டிஎன்ஏவில் கிடையாது என அண்ணாமலை கூறினார்.