டாஸ்மாக், லாட்டரி சீட்டு விற்பனை போன்றவை வருமானம் ஈட்டி அரசாங்கம் நடத்துவது ஏற்புடையது அல்ல என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
கே.எஸ். அழகிரி சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை எல்லாம் கிடையாது. நான் ஊழல் செய்யவில்லை அவர் என்று கூற வேண்டும் அல்லது ஊழல் செய்யவில்லை என்று கூற வேண்டும். அதையெல்லாம் விட்டுவிட்டு பழிவாங்கும் நடவடிக்கை என்று சொல்வது கொஞ்சமும் சரியல்ல.
பெகாசஸ் செல்போன் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் அரசாங்கங்களுக்கு தாங்கள் கருவியை விற்பனை செய்ததாக அந்த நிறுவனமே கூறியுள்ளது. இந்தியாவுக்கும் அக்கருவியை விற்றோம் என்று தெரிவித்துள்ளது. இதை பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் மறுத்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் மறுப்பு எதுவுமே சொல்லவில்லை. டாஸ்மாக், லாட்டரி சீட்டு விற்பனை போன்றவை எல்லாம் மக்களுக்குத் தீங்கு செய்யக்கூடியவை. அதன் மூலம் வருமானம் ஈட்டி அரசாங்கம் நடத்துவது என்பது ஏற்புடையது அல்ல. இதை காங்கிரஸ் நிச்சயம் ஏற்றுக்கொள்ளாது. இதையெல்லாம் கொள்கை ரீதியாக காங்கிரஸ் எதிர்க்கிறது.” என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகளை மீண்டும் கொண்டு வருவதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டாம் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் கே.எஸ். அழகிரியும் எடப்பாடி பழனிச்சாமி வழியில் டாஸ்மாக், லாட்டரி சீட்டு விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.