
தமிழக பா.ஜ.க-வில் முக்கிய பொறுப்பு வகித்து வந்த கருப்பு முருகானந்தம், கட்சி பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூரைச் சேர்ந்த அவர், நீண்ட காலமாக பா.ஜ.க-வில் செயல்பட்டு வந்த நிலையில், கட்சியின் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயல்பட்டதாகக் கூறி அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே, திருச்சியில் வசிக்கும் பெண் ஒருவர் கருப்பு முருகானந்தம் மீது கட்சி தலைமையிடம் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. அந்தப் புகாரைத் தொடர்ந்து கட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால், தன் மீதான குற்றச்சாட்டுகளையும் நடவடிக்கையையும் கருப்பு முருகானந்தம் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், தனது அரசியல் பயணம் நீண்ட காலமாக எந்தவித புகாருமின்றி தொடர்ந்ததாக குறிப்பிட்டுள்ளார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் தொடங்கிய தனது பணியும், பா.ஜ.க-வில் 30 ஆண்டுகளுக்கும் மேலான செயல்பாடும் அர்ப்பணிப்புடன் இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். தனக்கு எதிராக கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானவை என்றும், உரிய விசாரணை நடத்தாமல் தன்னைப் பொறுப்பில் இருந்து விடுவித்திருப்பது ஏற்கத்தக்கதல்ல என்றும் கருப்பு முருகானந்தம் தெரிவித்துள்ளார். இதையும் படித்து பாருங்களேன் -Longest Train Journeys In India: 3 பகல், 3 இரவு... இந்தியாவையே கடக்கும் ரயில் பயணம்! 75 மணி நேரம் தொடரும் பிரம்மாண்ட Train Travel.!
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சந்தோஷ் ஜி மற்றும் மாநில பொறுப்பாளர் அரவிந்த் மேனன் ஆகியோரிடம் ஏற்கெனவே பேசியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரணை நடத்தி அதன் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என தன்னிடம் தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால், அத்தகைய விசாரணை நடைபெறுவதற்கு முன்பே தன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் போலி புகைப்படங்களும், போலியாக தயாரிக்கப்பட்டதாக அவர் கூறும் புகார் மனுவும் இந்த நடவடிக்கைக்கு அடிப்படையாக இருந்ததாக தெரிவித்துள்ளார். இதையும் படித்து பாருங்களேன் - ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! இந்த தகவலை மிஸ் பண்ணாதீங்க!
இந்த தகவல்கள் உண்மையானவை அல்ல என்றும், அவற்றின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கருப்பு முருகானந்தம் தனது பதிவில் தெரிவித்துள்ளார். அத்துடன், தன்னைப் பற்றி போலியான தகவல்கள் மற்றும் வதந்திகளைப் பரப்புவோர் மீது சட்டரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கருப்பு முருகானந்தத்தின் இந்த விளக்கம், பா.ஜ.க.வின் நடவடிக்கை தொடர்பான விவகாரத்தை மேலும் பரபரப்பாக்கியுள்ளது. தற்போது அவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்தும், கட்சி தரப்பில் அடுத்தகட்டமாக என்ன விளக்கம் வெளியாகும் என்பதையும் அரசியல் வட்டாரங்கள் கவனித்து வருகின்றன. இதையும் படித்து பாருங்களேன் - அப்பா காத்திருக்கிறார்! தந்தையைப் பற்றி முதன்முதலாக மனம் திறந்த ஜேசன் சஞ்சய்.!