தஞ்சையில் 7ஆம் தேதி ஒன்று கூடும் ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன்..! அதிர்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி

By Ajmal KhanFirst Published Jun 5, 2023, 10:36 AM IST
Highlights

எடப்பாடி பழனிசாமி அணிக்கு எதிராக ஒன்று சேரும் வகையில் நாளை மறுதினம் தஞ்சையில் நடைபெறவுள்ள நிகழ்வில் ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரன், சசிகலா சந்தித்து அடுத்த கட்ட திட்டம் தொடர்பாக ஆலோசிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக ஒற்றை தலைமை மோதல்

ஜெயலலிதா மரணத்திற்கு அதிமுகவில் ஏற்பட்ட அதிகார போட்டி காரணமாக 4 பிரிவாக அதிமுக பிரிந்துள்ளது. டிடிவி தினகரன் மற்றும் சசிகலாவை அதிமுகவில் இருந்து நீக்கிய நிலையில் ஓபிஎஸ் உடன் இணைந்து 4 ஆண்டுகாலம் ஆட்சி புரிந்த எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு பிறகு கட்சி வலுப்படுத்த இரட்டை தலைமை தேவை இல்லை ஒற்றை தலைமை தான் தேவை என்ற கருத்து இபிஎஸ் ஆதரவாளர்களால் முன் வைக்கப்பட்டது. இதனையடுத்து நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட இபிஎஸ், ஒருங்கிணைப்பாளர் பதவியை ரத்து செந்து தீர்மானம் நிறைவேற்றினார். இதனை தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம் அதிமுக சட்ட விதிகளுக்கு புறம்பாக செயல்படுவதாக கூறி அதிமுகவில் இருந்தும் நீக்கப்பட்டார். 

ஒன்று சேரும் சசிகலா, ஓபிஎஸ்

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஓபிஎஸ் தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றங்களில் சட்ட போராட்டம் நடத்தினார். ஆனால் அனைத்திலும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவே தீர்ப்பு வந்ததால், டிடிவி தினகரனை சந்தித்து ஒன்றினைந்து செயல்பட முடிவெடுத்தனர். இதனையடுத்து விரைவில் சசிகாலவையும் சந்திக்க இருப்பதாக தெரிவித்தார்.  இந்தநிலையில் ஓபிஎஸ் ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கம் இல்ல திருமண விழா நாளை மறுதினம் நடைபெறுகிறது. இந்த விழாவில் பங்கேற்குமாறு ஓபிஎஸ், சசிகலா. டிடிவி தினகரன் ஆகியோருக்கு அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்று ஓபிஎஸ் மற்றும் டிடிவி ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

அதிர்ச்சியில் எடப்பாடி

அதே போல சசிகலாவும் திருமண விழாவில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. சுப முகூர்த்த தினத்தில் 3 பேரும் ஒன்றாக சந்திப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் ஏற்கனவே சசிகலா மற்றும் தினகரனை ஒதுக்கிவைத்த காரணத்தில் தென் மாவட்டங்களில் வாக்கானது பிரிந்து செல்லும் நிலை ஏற்பட்டது. இதன் காரணமாகவே சட்ட மன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பு பறி போனது. இந்த நிலையில் ஓபிஎஸ்யும் கூடுதலாக இணைந்துள்ளதால் தென் மாவட்டத்தில் எடப்பாடி அணியின் வாக்கு மேலும் பிரியும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக தனது ஆதரவாளர்களோடு எடப்பாடி பழனிசாமி விரைவில் ஆலோசனை மேற்கொள்வார் என கூறப்படுகிறது.  

இதையும் படியுங்கள்

பா.ஜ.க.வை வளர்க்க அரைவேக்காட்டுத்தனமாக அற்பத்தனமான கருத்துகளை அண்ணாமலை பேசுகிறார்- விளாசும் கே.எஸ்.அழகிரி

click me!