வருமான வரித்துறையினர் அளித்த புகாரினைத் தொடர்ந்து தமிழக அமைச்சர்கள் காமராஜ், கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன், தளவாய் சுந்தரம், விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் அளிக்கப்பட்ட விவகாரத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் இல்லத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அமைச்சர்கள் காமராஜ், கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் விஜயபாஸ்கரின் வீட்டுக்குள் பிரவேசித்தனர். மேலும் விஜயபாஸ்கரின் ஆதரவாளர் முக்கிய ஆவணங்களை பறித்துச் சென்றதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தச் சூழலில் சோதனையின் போது அத்துமீறி நுழைந்ததாக வருமான வரித்துறை சார்பாக புகார் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் காமராஜ், கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம் உள்ளிட்ட 4 பேர் மீது அபிராமபுரம் காவல்நிலையத்தில் அத்துமீறுதல் , மிரட்டுதல், அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட (சட்டப்பிரிவு 183, 186, 189, 448) பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.