சென்னையைச் சேர்ந்த இஸ்லாமியப் பெரியவர்கள் அடங்கிய குழுவினர் அண்ணாநகரில் உள்ள தேவாலயம் ஒன்றுக்கு சென்று இலங்கையில் தேவாலயங்களில் நடந்த தாக்குதலுக்காக மன்னிப்பு கோரிய சம்பவம் அங்கிருந்தவர்களை உணர்ச்சிவசப்படச் செய்தது.
இலங்கை தலைநகர் கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஈஸ்டர் தினத்தன்று கொழும்பில் உள்ள தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் குண்டு வெடித்தது.
ஈஸ்டர் ஆராதனை நடந்து கொண்டிருந்தபோது கூட்டத்துக்குள் புகுந்த தற்கொலைப்படையினர் குண்டுகளை வெடிக்கச் செய்தனர், இந்த சம்பவத்தில் 259 பேர் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பினர் பொறுப்பேற்றுக் கொண்டனர் இந்த சம்பவத்திற்கு உலகம் முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில் சென்னையைச் சேர்ந்த சில இஸ்லாமியப் பெரியவர்கள் அடங்கிய குழு அண்ணாநகரில் உள்ள சர்ச் ஒன்றுக்குச் சென்று கிறிஸ்தவ மக்களிடம் மன்னிப்பு கோரினர்.
சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த இஸ்லாமியப் பெரியவர்கள் குழு, செயின்ட் லூக் சர்ச்சுக்குச் சென்றனர். தங்களது கையில் தீவிரவாதம் நமது உறவை முறிக்க அனுமதிக்கக் கூடாது என்று எழுதப்பட்டிருந்த பதாகைகளை ஏந்தியிருந்தனர்.
பின்னர் அவர்கள் பதாகைகளையும் ஏந்திப் பிடித்தபடி அவர்கள் சர்ச்சுக்குள் அணிவகுத்து நின்றனர். இந்த செயல் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய வைத்தது.