சிட்டிங் எம்எல்ஏ விஜயதாரணி காங்கிரஸ் சார்பில் போட்டியா..? பாஜக சார்பில் போட்டியா..? விளவங்கோடு ரகிட ரகிட..!

By Asianet TamilFirst Published Mar 16, 2021, 8:44 AM IST
Highlights

விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ், பாஜக என இரு கட்சிகளுமே வேட்பாளர்களை அறிவிக்காத நிலையில், சிட்டிங் காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணியை வைத்து இத்தொகுதியில் பரபரப்பு கிளம்பிக்கொண்டிருக்கிறது.
 

வேட்பு மனுத்தாக்கல் தொடங்கி வேட்பாளர்கள் ஜரூராக  பிரசாரத்தையும் தொடங்கிவிட்டனர், ஆனால், காங்கிரஸ் கட்சியில் விளவங்கோடு, குளச்சல், மயிலாடுதுறை, வேளச்சேரி தொகுதிகளுக்கு இன்னும் வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்படவில்லை. இதேபோல பாஜகவில் தளி, உதகமண்டலம், குளச்சல், விளவங்கோடு ஆகிய தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்படவில்லை. இதில் விளவங்கோடு தொகுதி பலராலும் உற்று நோக்கப்படுகிறது. அந்தத் தொகுதியில் சிட்டிங் காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி மீண்டும் போட்டியிட சீட்டு கேட்டுள்ளார்.


ஆனால், விஜயதாரணிக்கு சீட்டு தரக்கூடாது என்று காங்கிரஸ் கோஸ்டிகள் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டுவருகின்றன. இதனால், விளவங்கோட்டில் யார் வேட்பாளர் என்பதில் இழுபறி நீடிக்கிறது. இதேபோல விளவங்கோட்டில் பாஜக சார்பிலும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட சீட்டு கொடுக்காவிட்டால், விஜயதாரணி பாஜகவுக்குத் தாவிவிடுவார் என்று தொடர்ந்து தகவல்கள் வெளியாகிவருகின்றன. திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத திமுக எம்.எல்.ஏ. டாக்டர் சரவணன், அதிருப்தியில் பாஜகவில் இணைந்தார். அவர் மதுரை வடக்கில் போட்டியிட பாஜக உடனே சீட்டு கொடுத்தது.
இதேபோல விளவங்கோட்டில் விஜயதாரணிக்கு சீட்டு கொடுக்கப்படாவிட்டால், அவர் டாக்டர் சரவணன் போல பாஜகவில் இணைவார் என்றும் அவருக்கு விளவங்கோட்டில் போட்டியிட வாய்ப்பு வழங்கபடும் என்றும் தகவல்கள் தாறுமாறாக கிளம்புகின்றன. தற்போது மாற்றுக்கட்சியில் உள்ளவர்களை பாஜகவுக்குக் கொண்டு வரும் பணியை தமிழக பாஜக செய்துவருகிறது. அப்படி வருவோருக்கு முக்கியத்துவமும் கொடுக்கப்படுகிறது. அந்த வகையில் குமரியில் மேலும் செல்வாக்கைக் உயர்த்தும் வகையில் விஜயதாரணிக்கு சீட்டுக்கொடுத்தாலும் ஆச்சரியமில்லை என்று பாஜகவிலும் பேச்சுகள் உலா வருகின்றன. இதன் காரணமாக பாஜக, காங்கிரஸ் என இரு கட்சிகளுமே இந்த தொகுதியில் வேட்பாளரை அறிவிக்காமல் உள்ளன என்றும் தகவல்கள் உலா வருகின்றன.
ஆனால், இவற்றையெல்லாம் விஜயதாரணி மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், “காங்கிரஸ் பரம்பரையில் வளர்ந்த நான் பாஜவுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. என் மீது அவதுாறு பரப்புவோர் மீது வழக்கு தொடர்வேன். வதந்தி பரப்புவோரை நான் சும்மா விடப்போவதில்லை” என்று விஜயதாரணி எச்சரித்துள்ளார்.
 

click me!